சச்சின் பைலட்டின் கலகத்துக்கு உண்மை காரணம் இதுவா?
- ஆர்.மணி
டெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அஷோக் கெலாட் தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
200 எம் எல் ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில் காங்கிரஸூக்கு 114 எம் எல் ஏ க்கள் இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனக்கு ஆதரவான 18 எம் எல் ஏ க்களுடன் கலக குரல் எழுப்பினார். தன்னை முதலமைச்சராக ஆக்க வேண்டுமென்று பைலட் வைத்த கோரிக்கை காங்கிரஸ் தலைமையால் நிராகரிக்கப் பட்டதால் ஆட்சியை கவிழ்க்கத் தயாரானார்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த 18 எம்எல்ஏ க்களும் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். பைலட்டை துணை முதலமைச்சர் பதவியிலிருந்து கெலாட் டிஸ்மிஸ் செய்து விட்டார். இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென்று கெலாட் வைத்த கோரிக்கையை மூன்று முறை நிராகரித்த ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி பேரைவயை கூட்ட அனுமதி அளித்திருக்கிறார்.
அநேகமாக அன்றைய தினம் தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை பேரவையில் கெலாட் நிருபித்து விடுவார், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனக்கே பெரும்பான்மை காங்கிரஸ் எம் எல் ஏ க்களின் ஆதரவிருப்பதை நிருபித்து ஆட்சியை காப்பாற்றிக் கொண்டு விடுவார் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இறுதி முடிவு தெரியும் வரையில் நாம் அறுதியிட்டு எதனையும் சொல்ல முடியாது என்பதும் உண்மைதான்.
இது ஒரு புறம் இருக்க திடிரென்று சச்சின் பைலட் கலக குரல் எழுப்பியதற்கு என்ன காரணம் என்ற விஷயமும் இப்போது ஆராய்ச்சி பொருளாகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த விஷயம் பற்றி சத்திஷ்கர் மாநில காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் பூபேஷ் பகேல் சொன்ன ஒரு கருத்து சுவாரஸ்யமானதாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி ஆங்கில நாளேட்டுக்கு பூபேஷ் பகேல் கொடுத்த ஒரு பேட்டியில் கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார்; “நான் நீண்ட நாட்களாக ராஜஸ்தான் அரசியலை உற்று நோக்கி வருகிறேன். திடிரென்று பல மாதங்கள் சிறையில் இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். ஆனால் உமர் அப்துல்லாவை கைது செய்ய பிரயோகிக்கப்பட்ட அதே சட்டங்களின் கீழ் கைதான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றோர் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தி இன்னமும் சிறையில்தான் இருக்கிறார். இதற்கு என்ன காரணம்? சச்சின் பைலட் உமர் அப்துல்லாவின் மைத்துனர் என்பதுதான் காரணமா?” என்று கேட்டிருந்தார் சத்திஷ்கர் முதலமைச்சர்.
உமர் அப்துல்லாவின் தங்கை சாரா அப்துல்லா சச்சின் பைலட்டின் மனைவி என்பது பலரும் அறிந்திராத விஷயம். இந்த பேட்டி மூலம் அந்த விஷயத்தையும் வெளியில் சொல்லி விட்டார் பகேல். சத்திஷ்கர் முதலமைச்சரின் இந்த பேட்டிக்கு காங்கிரஸ் மேலிடம், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியயங்கா காந்தி உள்ளிட்ட எவரும் எந்த கருத்தும், கண்டனமும் தெரிவிக்கவில்லை. சச்சின் பைலட்டும் இதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால் உமர் அப்துல்லா கடுங் கோபம் அடைந்து விட்டார். “இதுதான் காங்கிரஸின் பிரச்சனை. காங்கிரஸூக்கு தன்னுடைய நண்பன் யார் எதிரி யார் என்பதே தெரியாது. என்னுடைய விடுதலைக்கும் சச்சின் பைலட்டின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பகேல் கூடிய விரைவில் என்னுடைய வக்கீல்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய நிலைக்கு சென்று விட்டார்” என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் சொல்லியிருந்தார்.
ஆனால் பகேல் அடங்கிய மாதிரி தெரியவில்லை. ”ராஜஸ்தானில் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஜனநாயக படுகொலையை நீங்கள் (உமர் அப்துல்லா) உங்களுக்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் சொன்ன குற்றச்சாட்டு கேட்கப்பட்ட ஒரு கேள்விதான். நாங்கள் தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டேதான் இருப்போம்” என்று மற்றோர் ட்வீட் போட்டார். இந்த விவகாரம் குறித்து இந்த நிமிடம் வரையில் சச்சின் பைலட்டோ, சாரா பைலட்டோ வாயே திறக்கவில்லை.
மர்ம விதைகள்.. அமெரிக்க மக்களுக்கு சீனாவிலிருந்து சென்ற பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஷாக் சம்பவம்!
உமர் அப்துல்லா மன்மோஹன் சிங் அமைச்சரவையிலும், அவருடைய தந்தை ஃபாரூக் அப்துல்லா வாஜ்பாய் அரசிலும் அமைச்சர்களாக இருந்தது வரலாறு. ஃபாரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா பிரதமர் நேரு அரசால் சிறை பிடிக்கப் பட்டு தமிழகத்தின் கொடைக்கானலில் பத்தாண்டுகள் வீட்டு சிறையில் இருந்தவர். ஷேக் அப்துல்லா பின்னர் இந்திரா காந்தியுடன் சமாதானமாகி ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரானார். ஷேக் அப்துல்லா நேருவின் தந்தை மோதிலால் நேருவின் இரண்டாவது மனைவியின் மகன் என்பதும் பலரும் அறியாத உண்மை.
இந்த பின்புலத்தில் பார்த்தால் சதீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேலின் கருத்தை ஒதுக்கித் தள்ள முடியாதுதான். அரசியலில் எதுவும் சாத்தியம் என்றும் சொல்லலாம் …. நடிகர் கவுண்டமணியின் மொழியில் 'அரசியலில் இதெல்லாம் சாதரணப்பா …’ என்றும் சொல்லலாம் தான்!