இந்திய ஆக்ரோஷத்தால் பயந்து நடுங்குகிறதா பாகிஸ்தான்? அடுத்தடுத்த நடவடிக்கைகளை பாருங்க
டெல்லி: இந்தியாவின் ஆக்ரோஷம் காரணமாக, பாகிஸ்தான் தற்போது பயமடைந்து உள்ளதாகவே அதன் நடவடிக்கைகளில் தெரிகிறது.
பாகிஸ்தான் எதிர்பார்க்காத நேரத்தில் அதன் வான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை தாக்கி விட்டு திரும்பி வந்து விட்டன.
Also Read: எல்லையில் போர் பதற்றம்.. முப்படைகளின் தளபதிகள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த அவமானத்தை பாகிஸ்தானால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த நிலையில்தான் தனது எப் 16 ரக போர் விமானத்தை ஜம்மு காஷ்மீர் எல்லையில் பூச்சாண்டி காட்டுவதற்கு அனுப்பி வைத்தது.
விரட்டிய விமானம்
அதை இந்திய விமானப்படையின் விமானங்கள் விரட்டிச் சென்றபோது, மிக்21 பைசன் வகை விமானத்தின் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கீழே விழுந்து கிடந்த அபிநந்தனை அப்பகுதியினர் தாக்குவது போலவும், அவர்களை பாகிஸ்தான் ராணுவம் விரட்டி விட்டு, அபிநந்தனை பத்திரமாக மீட்டு செல்வது போலவும் அதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
திடீர் வீடியோ
இதன்மூலம் பாகிஸ்தானியர்களின் கோபம் இந்திய ராணுவத்தின் மீது இருப்பதாகவும், இருந்தாலும் பாகிஸ்தான் ராணுவம் கண்ணியமாக நடந்து கொள்வது போலவும் காட்டப்பட்டது. ஆனால் இவ்வாறு வீடியோ வெளியிட்டது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் வரத் தொடங்கியதும் உடனடியாக அபிந்தனுக்கு, டீ கொடுத்து அவரை சிறப்பாக கவனிப்பது போன்ற ஒரு வீடியோவை மீண்டும் பாகிஸ்தான் வெளியிட்டது.
பணிந்து சென்ற பாகிஸ்தான்
இதன் மூலம் அபிநந்தனுக்கு, சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலும், நமக்குத்தான் சர்வதேச அளவில் இருந்து அழுத்தம் அதிகரிக்கும், என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு இருப்பது உறுதியாகி விட்டது. அல்லது அவ்வளவு குறுகிய நேரத்திற்குள் அபிநந்தனை, நாங்கள் மரியாதையாத்தான் நடத்துகிறோம். ஜெனிவா உடன்படிக்கைக்கு மதிப்பு அளிக்கிறோம் என்று அறிவித்துவிட்டு, பணிந்து செல்லும் நாடு பாகிஸ்தான் கிடையாது.
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ரெடி
ஆனால் நேற்று அதுதான் நடந்தது. இது மட்டுமா? உடனடியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். ஆளுக்கு முன்பாக போருக்கு கையை உயர்த்தும் பாகிஸ்தான் இப்போது தலையை குனிந்து வருவதன் பின்னணி யோசிக்கவைக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் சிலர் கூறுவது இதுதான்: இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, பாகிஸ்தானை தனிமைபடுத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று விட்டது.
பிணையக்கைதியாக்கிறது
எனவேதான், எல்லை தாண்டி சென்று தீவிரவாத முகாம்களை அளித்தபோது கூட எந்த நாடும் இந்தியாவை கண்டிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வல்லரசு நாடுகளும், பாகிஸ்தானைத்தான் கண்டித்தன. எனவே, அபிநந்தனை பிணையக் கைதிபோல, பயன்படுத்தி, எல்லையில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று பாகிஸ்தான் பேரம் பேச முயன்றது. அப்படி பேரம் பேசியாவது இந்தியாவை பின்வாங்க வைக்கலாம் என்பதால்தான் அபிநந்தன் தங்களிடம் இருந்த வீடியோவை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான். வெளிப்படையாக இந்திய பைலட் எங்களிடம்தான் உள்ளார் என வீடியோ வெளியிடுவதன் நோக்கம், அவரை பிணையக் கைதி போல பயன்படுத்தலாம் என்ற திட்டம்தான்.
எல்லையால் பாகிஸ்தானுக்கு தொல்லை
எந்த நாடும் தங்களுக்கு, ஆதரவு அளிக்காத நிலையில், இந்தியா தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதை தாக்குபிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பாகிஸ்தான் அபிநந்தனை, பயன்படுத்தி எப்படியாவது இக்கட்டில் இருந்து தப்பிக்க முயன்றது. இதுதான், அந்த நாட்டின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்கிறார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள். அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்றால், எல்லையில் போர் பதற்றம் குறைய வேண்டும் என்று அடுத்ததாக பாகிஸ்தான் நிபந்தனை விதித்தது. ஆனால், இந்தியா அதெல்லாம் நடக்காது அபிநந்தனை முதலில் இந்தியா அனுப்ப வேண்டும் என கறாராக கூறிவிட்டது. வேறு வழியின்றி, அதற்கும் ஒப்புக்கொண்டது பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தான் ஒரு விஷயத்தை மறந்து விட்டது. அபிநந்தன் இந்தியா திரும்பிய பிறகுதான், அவர்களுக்கு, எதிர்பாராத, கச்சேரி காத்துக்கொண்டு இருக்கிறது என்பதுதான் அது.