ராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள்? அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது
Recommended Video
டெல்லி: வட இந்திய மக்கள், இந்தியாவின் பழம் பெரும் கட்சியான, காங்கிரஸையும், அதன் தற்போதைய தலைமையையும் புறக்கணித்துவிட்டதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.
17வது லோக்சபா தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கசப்பு மருந்தை கொடுத்துள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான எம்பிக்கள் பலத்திற்கான முன்னிலையை காலை 9.15 மணிக்கே பெற்றுவிட்டது பாஜக கூட்டணி. ஆனால் காங்கிரஸ் கூட்டணியோ, மூன்று டிஜிட், அதாவது 100 தொகுதிகளில் கூட அப்போது முன்னிலையில் இல்லை.
தமிழகத்தில் திமுக பெற்றுக் கொடுத்த முன்னிலையை தவிர்த்து பார்த்தால், காங்கிரஸ் நிலை பரிதாபம்தான். அதிலும், அமேதி தொகுதியில், அதாவது காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரபிரதேச மாநிலத்தில், அதுவும், தான் சிட்டிங் எம்பியாக உள்ள தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார் ராகுல் காந்தி. அடுத்த பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலினால் முன்மொழியப்பட்ட அதே சாட்சாத் ராகுல் காந்திதான்.
பல கட்சி ஆதரவு
அமேதி பின்னடைவை அவ்வளவு எளிதாக எடுக்க முடியாது. ஏனெனில், கூட்டணியில் இல்லை என கூறிக்கொண்டாலும், அமேதி தொகுதியில், தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜுக்கும், காங்கிரசுக்கு உதவின. ஆனால், பாஜகவோ தனித்தே இம்மூன்று கட்சி கூட்டணியை, எதிர்கொண்டும், அமேதியில் அபார முன்னிலை பெற்றுள்ளது.
ராகுல் காந்தி தலைமை
அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி, வெற்றிமுகம் காண்பித்து வருகிறார். நேரு குடும்பத்திலிருந்து வந்து, அடுத்த பிரதமர் இமேஜுடன் உள்ள ராகுல் காந்திக்கு அமேதியில் கிடைத்த அடி என்பது, ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. ராகுல் காந்தி தலைமையையும், காங்கிரசையும், வட இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏற்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள்
ஏனெனில் ராகுல் காந்தி மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72,000 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவேன் என்றார். ரஃபேல் ஊழலில் மோடிக்கு பங்கு உள்ளது என்றார். ஆனால், அவரது வாக்குறுதியையும், குற்றச்சாட்டையும் மக்கள் பெரிதாக எடுக்கவில்லை என்பதை காங்கிரஸ் கூட்டணிக்கும் மற்றும் அமேதியில் ராகுலுக்கும் கிடைத்த வாக்குகள் சுட்டிக் காட்டுகின்றன.
காங்கிரஸ் இல்லா பாரதம்
கடந்த தேர்தலில் 44 தொகுதிகளை பெற்றதை கூட மறந்துவிடலாம். ஆனால் 5 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பிறகான அதிருப்தியை கூட காங்கிரசால் லாபகரமாக மாற்றமுடியவில்லை என்பதை என்ன சொல்ல? காங்கிரஸ் கட்சி தென் இந்தியாவுக்கு மட்டுமேயான கட்சியாக மாறி வருகிறது. தென் இந்தியாவிலும் கூட, கூட்டணி பலத்தால்தான் உயிர் வாழ்கிறது. தனித்து நின்றால், கர்நாடகா தவிர தெற்கே எந்த மாநிலத்திலும், கணிசமான வெற்றியை அந்த கட்சியால் பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. நாட்டின் மிக பழமையான ஒரு கட்சியின் வீழ்ச்சி, 'காங்கிரஸ் இல்லா பாரதம்' என்ற மோடியின் முழக்கத்தை தீர்க்க தரிசனமாக மாற்றிக்கொண்டு உள்ளது.