லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்? எந்த தொகுதியில் போட்டி தெரியுமா?
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் தனக்கு பதிலாக, ரேபரேலி தொகுதியில் தனது மகள் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தி கடந்த 1999ம் ஆண்டு முதல் எம்பியாக பதவி வகித்து வருவது ரேபரேலி தொகுதியாகும். உ.பி. மாநிலத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அலை வீசியபோது கூட ரேபரேலியில் சோனியாவும், அம்மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் மட்டும் வென்றனர்.
பிற தொகுதிகளில் காங்கிரஸ் படு மோசமாக தோற்றது. ரேபரேலி தொகுதி மக்களுக்கும், நேரு குடும்பத்திற்குமான உறவு நெடியது.
இந்திரா காந்தி
1967 முதல் 1971 வரை முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி இங்கு வெற்றி பெற்றார். பிறகு இங்கு சோனியா காந்தியின் செல்வாக்கு நிலை பெற்றது. எனவே, இந்த தொகுதியில், பிரியங்கா காந்தியை களமிறக்கி, அவரது அரசியலுக்கு அஸ்திவாரம் போட முடிவு செய்துள்ளார் சோனியா காந்தி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர அரசியலுக்கு ஓய்வு
சோனியா காந்திக்கு கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடாமல் தவிர்க்க திட்டமிட்டுள்ளாராம். எனவே ரேபரேலியில் பிரியங்காவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தேர்தலில் போட்டியிடுவது பற்றி பிரியங்கா காந்தி இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
இரு தொகுதிகளில் ஆதரவு
உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து, 76 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. ஆனால் ரேபரேலி மற்றும் அமேதியில் போட்டியாமல் காங்கிரசுக்கு உதவ முன் வந்துள்ளன. அதேநேரம் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது காங்கிரஸ். ஆனால் ரேபரேலி, அமேதியில் வெற்றி ஏறத்தாழ உறுதி என்று நினைக்கிறது காங்கிரஸ். எனவே அதில் பிரியங்கா காந்தியை களமிறக்கி வெற்றியோடு அவரை அரசியலுக்குள் கொண்டுவர தாய், சோனியா காந்தி திட்டமிட்டுள்ளாராம்.
பிரச்சாரங்கள்
ராகுல் காந்தியைவிடவும், பேச்சாற்றல் மிக்கவராக பார்க்கப்படுவர் பிரியங்கா காந்தி. தோற்றத்திலும் தனது பாட்டி இந்திரா காந்தியை போல உள்ளார். எனவே, அரசியலில் செல்வாக்கு பெறும் வாய்ப்புள்ளது என்று கணக்குபோடுகிறாராம் சோனியா காந்தி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போட்டியிட்டபோது அந்த தொகுதிகளில் மற்றும் ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் பிரியங்கா காந்தி. இதுதான், இதுவரை பிரியங்கா காந்தியின் அரசியல் பங்களிப்பாக உள்ளது.
நிர்வாக திறமை
நிர்வாகத்திறனிலும் பிரியங்கா தனது பாட்டி இந்திரா காந்தியை போல அதிரடி காட்டக்கூடியவர் என்கிறார்கள். சமீபத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் முதல்வர் பதவிக்கு இருமுனை போட்டி ஏற்பட்டபோது, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தியதில் பிரியங்காவின் பங்களிப்பு அதிகம். தனது வீட்டுக்கே, சகோதரி, பிரியங்கா காந்தியை வரவழைத்து, முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வைத்து பிரச்சினையை சரி செய்தார் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம்.