தடுப்பூசி ஒதுக்கீடு கொள்கையில் வரும் மாற்றம்: தடுமாற்றத்தில் தனியார் மருத்துவமனைகள்
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்று தொடங்கியபோது அது இந்தியாவையும் கடுமையாக பாதித்தது. இந்தியாவில் கொரோனா முதல் அலை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு மேல் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது.
முதல் அலையின் பாதிப்பு 10 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவை பாதித்த நிலையில் தடுப்பூசியின் தயாரிக்கும் தேவை அதிகரித்தது. இதையடுத்து இந்தியாவிலும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் தயாரித்த கோவிட் ஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
இந்தியாவில் தடுப்பூசி பயன்பாடு
ஆரம்பத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோரில் இணை நோயுள்ளவர்கள், அடுத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக தடுப்பூசி பயன்பாடு அதிகரிக்கப்பட்டது. முதல் அலை ஓய்ந்த நிலையில் தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் தடுப்பூசிகள் வீணடிப்பும் அதிகரித்தது. தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆரம்பத்தில் 13% வரை வீணானதாக தகவல் வெளியானது.
தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து 75% வரை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அளிப்பது, 25% தனியாருக்கு விற்பனை என முடிவெடுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதனிடையே இரண்டாவது அலை கடந்த ஆண்டு மார்ச் முதல் கடுமையாக இந்தியாவை தாக்கியது. ஒருநாள் தொற்று 4 லட்சம் என்கிற அளவுக்கு எட்டியது.
கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை செப்டம்பர் வரை நிறுத்துங்கள்.. பணக்கார நாடுகளுக்கு WHO வேண்டுகோள்!
இரண்டாவது அலை தடுப்பூசியின் அவசியம் உணர்ந்த மக்கள்
இதனால் தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்துக்கொண்டு தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர், இதனிடையே 18 வயது முதல் 44 வயது வரை உள்ளோருக்கும் இத்திட்டம் அமலானது. இதனால் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் மத்திய அரசு இக்குறிப்பிட்ட வயதுள்ளோருக்கு மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என அறிவித்தது.
இந்தியாவில் தடுப்பூசி போடு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அது எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை என உலக சுகாதார நிறுவனம் உட்பட நிபுணர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டினர். மூன்றாம் அலை வருவதற்குள் இந்திய மக்களில் அதிகமானோருக்கு தடுப்பூசி போடவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.
25% ஒதுக்கீட்டை பயன்படுத்தாத தனியார் மருத்துவமனைகள்
ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வேண்டிய அளவு தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை, ஆகவே மத்திய அரசு அதிக அளவில் தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும், மத்திய அரசே கொள்முதல் செய்து தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தனியார் மருத்துவமனைகள் 25% தடுப்பூசிகளை கொள்முதல் செய்தாலும் அவைகளை முழுமையாக பயன்படுத்தாமல் 9% வரை பயன்படுத்தியுள்ளனர் மீதம் உள்ள தடுப்பூசிகள் தேக்கமடைந்துள்ளன.
ஸ்டாலின் கோரிக்கை
அவைகளை மத்திய அரசு பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு 10% மாநிலங்களுக்கு 90% தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்திருந்த தகவல் உண்மை என்பது நடைமுறையில் வெளிவந்தது.
இந்தியாவில் தனியார்களுக்கு 50% வரை தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்ட காலம் உண்டு பின்னர் 25% ஆக குறைக்கப்பட்டது. இரண்டாவது அலைக்குப்பின் அரசு மருத்துவ மனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு, உடனடியாக தடுப்பூசி போடும் ஆர்வம், வசதி படைத்தோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட திரண்டதால் முதலில் அதிகமாக இருந்த தனியார் மருத்துவமனை தடுப்பூசி போடும் பணி பின்னர் குறையத்தொடங்கியது.
தனியார் மருத்துவமனையை நாடாத மக்கள்
காரணம் மாநிலங்கள் இலவச தடுப்பூசி பணியை அதிகப்படுத்தியதும், குடியிருப்பு இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி பணியை அதிகரித்ததும், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பராமரித்ததும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி கட்டணம் உயர்வும் இதற்கு காரணமாக அமைந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் வரத்து குறைந்ததால் தடுப்பூசிகள் தேக்கமடைந்தன.
இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படும் முறை
ஜூன் 21 முதல் புதிய மையப்படுத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையை அரசு அறிமுகப்படுத்தியது. புதிய திட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் இலவச கோவிட் -19 தடுப்பூசியை பெறுகிறார்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் மொத்த தடுப்பூசியின் 75% அளவை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகள் உற்பத்தியாளர்களிடமிருந்து 25% தடுப்பூசிகளை நேரடியாக வாங்குகின்றன.
ஜூன் 21 வரை, இந்திய அடிப்படையிலான கோவிட் -19 உற்பத்தியாளர்கள் 50% தடுப்பூசி பங்குகளை மையத்திற்கும் 50% மாநிலங்கள் மற்றும் தனியார் துறைக்கும் விற்பனை செய்து வந்தனர். அரசின் புதிய விதிமுறைகள் தனியார் நிறுவனங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை கடுமையாக பாதித்துள்ளதாக இரண்டு நிறுவனங்கள் தரப்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவின் வழியாக முன்பதிவு
ஜூலை 1 முதல், மத்திய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான ஒற்றை சாளர அமைப்பை உருவாக்கி கொள்முதல் கொள்கையை மாற்றி, உற்பத்தியாளர்களிடமிருந்து கோவிட் -19 தடுப்பூசி பொருட்களை நேரடியாக வாங்குவதைத் தடை செய்து அதற்கு பதிலாக அரசாங்கத்தின் கோவின் மூலம் மட்டுமே அவர்களின் ஆர்டர்களை வழங்குவதை கட்டாயமாக்கியது.
தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்
இந்த நடவடிக்கை தனியார் மருத்துவமனைகள் கோவிட் -19 தடுப்பூசியை வாங்க ஐடி சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்கியது. தடுப்பூசியின் கடந்த கால பதிவுகளில் மருத்துவமனை கொள்முதல் அளவுகளின் அளவும் கண்காணிக்கப்படும் சூழல் உருவானது.
தனியார் மருத்துவமனைகளில் குறைந்த தடுப்பூசி போடும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கான 25 சதவீத தடுப்பூசி ஒதுக்கீட்டை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பயன்படுத்த பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்த தனியார் மருத்துவமனைகளில் சேகரிக்க மையம் தொடங்கியுள்ளது.
குறைந்தது தனியார் வேகம்
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்த தடுப்பூசி உற்பத்தியில் 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள்/நிறுவனங்களுக்கு ஒதுக்குவது இனி கட்டாயமாக இருக்காது. கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருப்பதால் இந்த நடவடிக்கை என தெரிகிறது.
மத்திய அமைச்சர் பதில்
ராஜ்யசபாவில் நேற்று முன் தினம் பாஜக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா, தனியார் துறையின் கொள்முதல் மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 7 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை பயன்பட்டுத்தப்பட்டிருப்பது கடந்த ஒரு மாதத்தில் கவனிக்கப்பட்டதாக கூறினார். எனவே 16 சதவிகிதம் -18 சதவிகிதம் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் இது போன்ற தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டு, மாநிலங்களுக்கான 75 சதவிகிதம் மத்திய மேற்கோளில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசு உற்பத்தி நிறுவனங்களுடன் பேசியுள்ளது மற்றும் தனியார் துறைக்கு தேவையான அளவுகளின் எண்ணிக்கையை மட்டும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.