தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
டெல்லி: தேர்தல் நேரத்தில் எதிர்கட்சியினரை முடக்கும் நோக்கத்தில் அரசு இயநதிரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எதிர்கட்சியினரை குறிவைத்து வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக சாடினார். தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் போக்கு மேலோங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எதிரணியில் உள்ள அரசியல் கட்சியினரின் வீடுகளில் ரெய்டுகள் நடப்பதையும் பார்க்கும் போது, தமிழகத்தில் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவது எந்த அளவிற்கு சரியான முடிவு என்பதை, தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும் என்றார். பணப்பட்டுவாடா தேர்தல் களத்தில் பாதிப்பை உருவாக்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே சமயம் நாடு முழுவதிலுமுள்ள பணப்பட்டுவாடா பிரச்சனையை விட்டுவிட்டு, தமிழகத்தில் மட்டும் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ள தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்றார்.
பழக்க தோஷத்தில் வணக்கம் போட்ட ராஜ் சத்யன்.. மதுரையில் மீண்டும் பஞ்சாயத்து
தேர்தல் நன்கொடை பத்திரத்தின் மூலம் அதிகம் பலனடைந்தது பாரதிய ஜனதா தான். அரசியல் உள்நோக்கத்தோடு தமிழ்நாட்டில் சோதனை நடத்தப்படுவதாக டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முழுக்க முழுக்க பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எடப்பாடி அரசு மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.