நாகாலாந்தில் வௌவால்களில் உள்ள வைரஸ் பற்றி ஆய்வு.. வூஹான் ஆய்வாளர்களுக்கு தொடர்பு?வெளியான பகீர் தகவல்
டெல்லி: கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து பரவியது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், நாகாலாந்தில் வௌவால்கள் குறித்து நடைபெற்ற ஆய்வில் வெளிநாடுகளின் பங்களிப்பு உள்ளது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தியது.
Recommended Video
சுமார் 1.5 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் நமக்குத் தெரியவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளும் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதனால் அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தினசரி உயிரிழப்பு குறைகிறது!
நாகாலாந்து ஆராய்ச்சி
இந்தச் சூழலில் தான் நாகாலாந்தில் இந்திய ஆய்வாளர்கள் வௌவால்கள் மீது நடத்திய ஆய்வு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் உள்ள கிஃபைர் மாவட்டத்தின் மிமி கிராமப் பகுதியில் வௌவால்களில் இருக்கும் வைரஸ்கள் குறித்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். கடந்த 2019இல் நடைபெற்ற இந்த ஆய்வு குறித்து மத்திய அரசு கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளது. மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்படுவதைத் தடுக்க அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
என்ன ஆய்வு
வௌவால்கள் குறித்த இந்த ஆய்வை தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) ஆகியவை இணைந்து மேற்கொண்டன. இந்த ஆய்வுக்காக அவர்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுள்ளன. வெளிநாடுகளிலிருந்து ஆய்வுக்கு நிதியுதவி பெறும் முன் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இருப்பினும், இந்த ஆய்வுக்காக உரிய அனுமதியைப் பெறவில்லை என்று சுகாதாரத் துறை கருதியதால் இது குறித்து விசாரணையைக் கடந்த 2019 டிசம்பர் மாதம் சுகாதாரத் துறை தொடங்கியது.
சீன ஆய்வாளர்கள்
கடந்த அக்டோபர் 2019ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு நிறுவனம், அமெரிக்கக் கடற்படை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி இயக்குநரகம், அத்துடன் இந்திய அணுசக்தித் துறை உள்ளிட்டவை நிதியுதவி செய்துள்ளன. இந்த ஆய்வை மேற்கொண்டு 12 ஆய்வாளர்களில் மூவர் இந்தியாவை சேர்ந்தவர்கள். மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து பேர், அமெரிக்கா மற்றும் சீனாவின் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து இருவரும் இந்த ஆய்வில் இருந்துள்ளனர்.
மறுப்பு
இந்த ஆய்வு முறையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மேற்கொள்ளப்படவில்லை என அதில் கூறப்பட்டது. இருப்பினும், இதில் கூறி புகார்கள் அனைத்தையும் தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) மறுத்துள்ளது. முறையான அனுமதிக்குப் பின்னரே வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் பேட்வுமன் என்று அழைக்கப்படும் ஷி ஜெங்லியின் பங்களிப்பு இந்த ஆய்வில் பெரியளவு இல்லை என்றும் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்பில்லை
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சீனாவின் தொடர்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த ஆய்வு எபோலா போன்ற நோய்களை ஏற்படுத்தும் filoviruses குறித்து மேற்கொள்ளப்படுபவை. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட்டவை. இந்த இரண்டிற்கும் தொடர்பும் இல்லை.
சீனா
இந்த ஆய்வில் வூஹான் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு மட்டுமின்றி அமெரிக்காவின் நிதியுதவியும் உள்ளதால் இது குறித்து மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இருப்பினும், வரும் காலத்தில் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளின் நிதியுதவியைப் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணிக்கலாம். எது எப்படியிருந்தாலும் கொரோனா தோற்றம் குறித்த கேள்விக்குப் பதில் கிடைக்கும் வரை, இது போன்ற சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யும்.