திஷா ரவி டூல்கிட்டுக்கும் டெல்லி கலவரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆதாரம் எங்கே.. நீதிமன்றம் கேள்வி
டெல்லி: டெல்லியில் குடியரசு தினம் அன்று நடைபெற்ற வன்முறைக்கும் திஷா ரவி ஷேர் செய்த டூல்கிட்டுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், காவல்துறைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா தன்பர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டூல்கிட் ஷேர் செய்து இருந்தார். பின்னர் அதை டெலிட் செய்தார். அந்த டூல்கிட்டில், இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக எந்த மாதிரி முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கம் இருப்பதாக டெல்லி சைபர் கிரைம் காவல்துறை சந்தேகித்தது. இதுதொடர்பான வழக்கில் பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.
5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முதல் 3 நாட்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இத்தனை விசாரணைகளுக்கு பிறகும்கூட திஷா ரவி மற்றும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கலவரம் ஆகிய இரண்டுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை காவல்துறை நீதிமன்றத்தில் இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று திஷா ரவி தாக்கல் செய்த மனு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், நீதிபதி தர்மேந்திரா ராணா முன்பு விசாரணைக்கு வந்தபோது.
திஷா ரவி ஷேர் செய்த டூல்கிட் மற்றும் 26ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு நேரடி தொடர்பு இருக்கிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால் காவல்துறை தரப்பில் இந்த டூல்கிட் மூலமாக உத்வேகம் பெற்று வன்முறையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி, அப்படியானால் திஷா ரவி மற்றும் டெல்லி கலவரம் ஆகியவற்றுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று நான் யூகித்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல்துறை.. இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதன் பிறகுதான் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பதை பற்றி சொல்ல முடியும் என்று தெரிவித்தனர்.
திஷா ரவி தரப்பு வாதிடுகையில், தனக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் வாதிடுகையில், அந்த டூல்கிட் வழக்கமாக நடைபெறும் போராட்டங்களின்போது ஷேர் செய்யப்படும் டூல்கிட் கிடையாது. அதில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்தால் எதிராளிகளை கொலை செய்வது உள்ளிட்டவற்றை தூண்டும் வகையிலான வாசகங்கள் உள்ள ஒரு வெப்சைட்டுக்கு அழைத்துச் செல்கிறது என்று தெரிவித்தனர். இருப்பினும் நீதிமன்றத்தில் காவல்துறையால் இதுவரை அந்த லிங்க் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.