தனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு
டெல்லி: விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து, 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிரங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ திட்டம்
இந்தநிலையில், எதிர்காலத்தில் இந்திய மேற்கொள்ள உள்ள விண்வெளி திட்டங்கள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் திட்டம் மட்டுமின்றி ககன்யான், சூரிய ஆய்வு , வெள்ளி கிரக ஆய்வு ஆகியவற்றிலும் இஸ்ரோ ஈடுபட உள்ளது என்றார்.
2020 -க்குள் ககன்யான்
வருகிற 2020 ஆம் ஆண்டு சூரியனை ஆராயும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்ற அவர், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெள்ளி கிரகத்தை ஆராய விண்கலத்தை அனுப்பும் திட்டமும் உள்ளது என்றார். இதே போல 2022 ஆம் ஆண்டுக்குள் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
தனி ஆய்வகம்
இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கு என்று தனி ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் சிவன் தெரிவித்தார்.
ரூ.10,000 கோடி மதிப்பு
முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், இந்தியா வரும் 2022 ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 10,000 கோடி ரூபாய் செலவிலான ககன்யான் திட்டத்தின் படி, இரண்டு அல்லது மூன்று பேர் விண்வெளிக்கு திட்டமிடப்படுள்ளதாகவும், இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.