குறையும் வெப்பநிலை.. எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.. டெல்லியை முடக்கிய பனி, புகை.. மக்கள் கடும் அவதி
வடமாநிலங்களில் நிலவி வரும் கடுமையான குளிர் மற்றும் பனி காரணமாக அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லி: வடமாநிலங்களில் நிலவி வரும் கடுமையான குளிர் மற்றும் பனி காரணமாக அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது டெல்லியில் காற்றின் தரமும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
எப்போதும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்தால் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடையும். பனி காரணமாக காற்றின் அடர்த்தி அதிகரிக்கும். இதனால் புழுதியும் அதிக அளவில் காற்றில் சேர்ந்து காற்றின் தரம் மிக மோசமாக பாதிக்கப்படும்.
கடந்த இரண்டு மாதமாக டெல்லியில் மோசமான காற்று காரணமாக மக்கள் அவதிப்பட்டார்கள். தற்போது மோசமான புழுதியுடன் சேர்த்து அங்கு பனியும் அதிக அளவில் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி எப்படி
டெல்லியில் நேற்று முதல் நாள் மிக குறைவாக 2.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. நேற்று 2.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று அதிகாலை 2.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை நிலவி வருகிறது. இன்று மாலை இந்த வெப்பநிலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாசு
இந்த பனியுடன் சேர்த்து தற்போது புகையும் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே டெல்லிக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று அங்கு தற்போது காற்றின் நிலை மிகவும் மோசமான நிலை எனப்படும் நிலையை அடைந்துள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
என்ன பாதிப்பு
இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. 30 ரயில்கள் இதனால் டெல்லியில் தாமதமாக செல்கிறது. விமானங்கள் சில டெல்லியில் தரையிறங்காமல் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் வரும் எந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை என்று மக்கள் கூறியுள்ளனர்.
மற்ற பகுதி
அதேபோல் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர்நிலவி வருகிறது. இமாச்சலப்பிரதேசம், மணாலி ஆகிய பகுதிகளில் உறை நிலைக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது. மிகவும் குறைவாக இமாச்சலில் உள்ள கெய்லாங் பாகுதியில் வெறும் -11.5 டிகிரி செல்ஸியஸ் நிலவியது குறிப்பிடத்தக்கது.
வேறு எங்கு
இதனால் வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. லடாக்கில் இருக்கும் டிராஸ் பகுதியில் -28.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. கொல்கத்தாவின் -7 டிகிரி செல்ஸியஸ் வரை நிலவி வருகிறது. காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் -6.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.