சைப்ரஸ் நாட்டுக்கு ஹவாலா பணம் அனுப்பிய சித்தார்த்தா? உதவிய காங். பிரமுகர்கள்.. ஐடி ரெய்டால் அம்பலம்
Recommended Video
டெல்லி: கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்ததாக, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின், மருமகனும், கஃபே காஃபி டே என்ற பிரபல சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்ட் நிறுவனருமான சித்தார்த்தா நேற்று முதல் திடீரென மாயமான நிலையில், அவரது உடல் மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி அணையில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
இவரது மரணத்தின் பின்னணி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் 'டைம்ஸ் நவ்' ஆங்கில ஊடகம், சித்தார்த்தா நிறுவனத்தில் வருமானவரித்துறை சார்பில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக செய்தி வெளியிட்டு வருகிறது.
அந்த செய்தியில் கூறியிருப்பது இதுதான்: சிங்கப்பூரில் உள்ள இடைத்தரகர் ஒருவர் மூலமாக, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக சித்தார்த்தா பணம் அனுப்பி பதுக்கி வைத்துள்ளார்.
ரஜ்னிஷ் கோபிநாத் என்ற சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் தான் சைப்ரஸ் உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வசதியாக உள்ள நாடுகளுக்கு இந்த பணத்தை அனுப்பி வைக்க உதவி செய்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் டிகே சிவகுமாரின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்தன. சிவகுமார் உள்ளிட்ட மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் சித்தார்த்துக்கு உதவி செய்துள்ளனர். இவ்வாறு வருமான வரித்துறையினர் சேகரித்த ஆவணத்தில் இருப்பதாக, டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா இரு வருடங்கள் முன்பாக, பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.