கொரோனா வீடுகளில் நோட்டீஸ்.. நாங்கள் அப்படி சொல்லவே இல்லை.. மறுத்த மத்திய அரசு.. திருப்பம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்த நிலையில், அப்படி செய்யுமாறு நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது,
நாடு முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அல்லது நகராட்சியின் சார்பில் நோயாளிகளின் கொரோனா பாதித்தவரின் வீடு அல்லது தனிமைப்படுத்துதலில் உள்ளவரின் வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
உச்சநீதிமன்றம்
இன்னமும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவது பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை ஒன்றை தாக்கல் செய்தார்.
நடைமுறை ரத்து
இந்த மனுவை நீதிபதிகள் அசோக்பூஷண், ஆர்.எஸ். ரெட்டி,எம்.ஆர். ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரதீப் சர்மா ஆஜராகி வாதிடுகையில். "கொரோனா நோயாளிகளின் பெயர்களை நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது.. இதன்காரணமாக நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள்.நோட்டீஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசு
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, "கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வேறு யாரும் செல்லக்கூடாது. வைரஸ் பரவலை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. எனினும், நோட்டீஸ் நடைமுறையால் கொரோனா நோயாளி அவமரியாதையை சந்திக்க நேரிடுகிறது என்றால் அந்த நடைமுறையை தவிர்க்கலாம். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தீண்டத்தகாதவர்கள்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, "கொரோனா நோயாளிகளின் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க இயலாது. இதுதொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என்று கூறினர்.
நோட்டீஸ் ரத்து
இந்த வழக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கொரோனா நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் வலியுறுத்தினர். எனவே கோவிட் -19 நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே வீட்டு தனிமைப்படுத்தும் சுவரொட்டிகளை வைக்கும் நடைமுறை மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும்.