அணு ஆயுதம் போன்ற நடவடிக்கை இது.. சுதர்ஷன் டிவி நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை..நீதிபதிகள் கருத்து
டெல்லி: சுதர்ஷன் டிவி என்ற இந்தி செய்தி சேனலில் வெளியான இஸ்லாமியர்களுக்கு எதிரான நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. நாங்கள் இப்படி தடை விதிக்க விரும்பவில்லை, ஆனால் இதுதான் ஒரே வழி, அணு ஆயுதத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கை இது என்று நீதிபதிகள் தங்கள் முடிவு குறித்து தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் சாவ்காங்கே என்ற செய்தியாளர் மூலம் தொடங்கப்பட்ட இந்தி சேனலான சுதர்ஷன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்சசி ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த சேனலில் சுரேஷ் சாவ்காங்கே தொகுத்து வழங்கிய ''பின்டாஸ் போல்'' என்ற நிகழ்ச்சி கடந்த வாரம் சர்ச்சையானது.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுரேஷ் , இந்தியாவில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற ஆட்சி பணிகளில் இசுலாமியர்கள் முறைகேடு செய்கிறார்கள். ஆட்சி பணிகளை பிடிக்க இவர்கள் ஜிஹாத் செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் ஒரே நம்பிக்கை.. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது.. நடிகர் சூர்யா நன்றி!
என்ன சொன்னார்
அதோடு இஸ்லாமியர்களை மோசமாக விமர்சித்தும், இஸ்லாமிய ஆட்சி பணி அதிகாரிகளை இழிவாக பேசியும் இருந்தார். இதையடுத்து சுதர்ஷன் டிவி சேனலில் வெளியான இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உச்ச நீதிமன்ற தடை விதித்து உள்ளது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், கேஎம் ஜோசப், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
வழக்கு தீர்ப்பு
வழக்கறிஞர் பிரோஸ் இஃபால் கான் என்பவர் மூலம் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தங்களின் தீர்ப்பு குறித்து இன்று நடந்த சுதர்ஷன் டிவி விசாரணையில் நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், கேஎம் ஜோசப், இந்து மல்ஹோத்ரா அமர்வு முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், சுதந்திரமான தொலைக்காட்சி ஒன்றில் வரும் நிகழ்ச்சிக்கு நாங்கள் இப்படி தடை விதிக்க விரும்பவில்லை.
தடை செய்யவில்லை
ஆனால் இதுதான் ஒரே வழி, அணு ஆயுதத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கை இது. இந்த நிகழ்ச்சி தடை விதிக்கப்பட வேண்டிய ஒன்று. யாரும் இதை தடை செய்யவில்லை. அதனால் நாங்கள் தடை செய்தோம். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் தடை செய்யவில்லை. நிகழ்ச்சிக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது.
அதிகம் கட்டாயம்
ஆனால் நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்பும் கூட அதற்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நாங்கள் இப்படி தடை விதிக்க வேண்டியது ஆகிவிட்டது. இது தவறான உதாரணமாகிவிட கூடாது என்பதே எங்கள் நோக்கம். இதை உதாரணமாக வைத்துக் கொண்டு மற்ற நீதிமன்றங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது.
குறி வைக்க கூடாது
அப்படி ஒரு விஷயம் நடக்க கூடாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சுதந்திரத்திற்கு நீதித்துறை எப்போதும் மதிப்பளிக்கிறது. மீடியா சுதந்திரமாக செயல்பட வேண்டும். நாம் எமர்ஜென்சியை பார்த்து இருக்கிறோம். நமக்கு சுதந்திரத்தின் அருமை தெரியும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறி வைத்து இப்படி தாக்குதல் நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. ஒரு சாரரை இப்படி குறி வைக்க கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.