நீர்பாசனம், சாலை, ரயில் திட்டங்கள்.. காஷ்மீருக்கு இனி வளர்ச்சிதான்.. மோடி அதிரடி உரை
டெல்லி: காஷ்மீரில் பாகிஸ்தான் சிலரைத் தூண்டிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் இதனால், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தற்போது வளர்ச்சிக்கான தடையை நீக்கிவிட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் நேரடியாக உரை நிகழ்த்தியபோது மோடி இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்:
சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. சிறப்பு சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்காக காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை, ஒரே நாடாக, ஒரே குடும்பமாக நமது அரசு எடுத்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பல கோடி இந்தியர்களின் கனவுகள் இன்று, நனவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இப்போது தேசத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும் ஒன்றே, பொறுப்புகளும் ஒன்றானவை.
காஷ்மீரில் பாகிஸ்தான் சிலரைத் தூண்டிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் இதனால், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. 42,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இனிமேல் எய்ம்ஸ் மருத்துவமனை, நீர் பாசன திட்டங்கள், மின்சார திட்டங்கள், சாலை வசதி, ரயில் வழித்தடங்கள், விமான நிலைய புனரமைப்பு போன்றவை இனிமேல் காஷ்மீரில் சாத்தியப்படும்.
இத்தனை ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு பல தடைகள் இருந்தன. எங்கள் முயற்சிகள் அந்த தடைகளை நீக்கியுள்ளன என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.