எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான கிரகத்தை... விட்டுச்செல்வது நமது தலையாய கடமை.. பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: அடுத்து வரும் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான ஒரு கிரகத்தை விட்டுச் செல்வது என்பது நமது தலையாய கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி ஐநா மாநாட்டில் பேசினார்.
யுஎன்சிசிடி என்று அழைக்கப்படும் United Nations Convention to Combat Desertificationஇன் 14ஆவது மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி, நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
எதிர்கால சந்ததி
மனிதர்களின் நடவடிக்கைகளால் நிலத்திற்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் கூட்டுப் பொறுப்பு என்று வலியுறுத்தி அவர், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான ஒரு கிரகத்தை விட்டுச் செல்வது என்பது நமது கடமை என்றும் பேசினார். இந்தியா, சக வளரும் நாடுகளுக்கு நில மறுசீரமைப்பு திட்டங்களை உருவாக்க உதவுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பூமிதான் அடிப்படை
மேலும், நிலங்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை தடுக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையை மேம்படுத்த இந்தியாவில் ஒரு ஆய்வு மையம் அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை நிலம் தான் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நிலம் மற்றும் அதன் வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
30 லட்சம் ஹெக்டேர் காடுகள்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நமக்கு நிறைய வேலைகள் உள்ளன என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்தால் அதை நம்மால் செய்ய முடியும். நிலங்களைப் பராமரிப்பது தொடர்பாகச் சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் ஹெக்டேர் காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போதுள்ள வனப்பகுதிகளில் நான்கில் ஒரு பங்கு.
பண்டைக் கால முறை
நில சீரழிவில் நடுநிலைமையை அடையும் பாதையில் இந்தியா மிகச் சரியாகவே சென்று கொண்டிருக்கிறது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அதேபோல கார்பன் டை ஆக்சைடு வெளியாகும் அளவை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பழங்கால தொழில்நுட்பங்களை ஊக்குவித்து அதன் மூலம் நில மறுசீரமைப்பை மேற்கொள்வோம்" என்று அவர் தெரிவித்தார்.