மோடிக்கு க்ளீன் சிட் கொடுக்க மறுத்த தேர்தல் ஆணையர் லவாசா நினைவிருக்கா? அவர் மனைவிக்கு ஐடி நோட்டீஸ்
Recommended Video
டெல்லி: தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களின்போது விதிமுறைகளை மீறியதாக, நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவர்தான் அசோக் லவாசா.
நாட்டின் முக்கியமான தன்னாட்சி அமைப்புகளில் ஒன்று தேர்தல் ஆணையம். இதில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் பதவி வகிப்பர். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி வகிக்கிறார். அசோக் லவசா மற்றும் சுசில் சந்திரா ஆகியோர் ஆணையர்களாகும்.
அசோக் லவாசா மனைவி நாவல் சிங்கால் லவாசா, முன்பு எஸ்பிஐ அதிகாரியாக இருந்தவர். 2005 ல் வங்கி வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பல நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றியவர்.
ஐடி நோட்டீஸ்
இந்த நிலையில், வருமான வரித்துறையின் பார்வை நாவல் சிங்கால் மீது படிந்துள்ளது. வருமானம் குறித்து விளக்கம் அளிக்க நாவல் சிங்காலுக்கு வருமான வரித்துறை 1 மாதம் முன்பே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். இப்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. அசோக் லவாசா கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, அவர் மத்திய நிதிச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
புகார்கள்
இந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக வந்த விதிமீறல்கள் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுத்தது. தேர்தல் தொடர்பான முடிவுகளின் போது மூன்று பேரும் ஒருமித்த முடிவு எடுப்பது வழக்கமான நடைமுறை. ஒருவேளை, ஒருமித்த கருத்து எட்ட முடியாவிட்டால், மெஜாரிட்டி ஆதரவு, அதாவது மூவரில் இருவர் ஆதரவு இருந்தால், அந்த முடிவை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தும்.
க்ளீன் சிட் எதிர்ப்பு
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு க்ளீன் சிட் கொடுப்பதை, அசோக் லவாசா மட்டும் எதிர்த்தார். நடவடிக்கை தேவை என்று கூறி, தேர்தல் ஆணையம் நடத்திய சில கூட்டங்களை அசோக் லவாசா புறக்கணித்தார். இது அப்போது பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது. இந்த நிலையில், அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தால் மீண்டும் அவரது பெயர் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.
விளக்கம்
இதனிடையே, நாவல் லவாசா, வெளியிட்ட அறிக்கையில் "நான் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளேன், ஓய்வூதியத்திலிருந்து நான் சம்பாதித்த அனைத்து வருமானத்தையும், பிற வருமான ஆதாரங்களையும், வருமான வரிச் சட்டத்தின்படி வெளிப்படுத்தியுள்ளேன்" என்று தெரிவித்ததுள்ளார்.