நம்முடைய உறவுக்கு இது ஒரு சான்று.. கோத்தபய வருகைக்காக தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி!
இலங்கை - இந்தியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகை ஒரு சான்றாகும் என்று பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.
டெல்லி: இலங்கை - இந்தியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகை ஒரு சான்றாகும் என்று பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே கடந்த சில தினங்களுக்கு முன் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். அங்கு அதிபர் தேர்தல் முடிவு வந்த மறுநாளே இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அங்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
அதன்பின் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டு நேற்று மதியம், இந்தியா வந்தார். இரண்டு நாள் பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.
இந்தியா வந்த அவருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலேயே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ஆன பின் முதல்முறையாக அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிறார்.
இது அவரின் முதல் அரசு முறை வெளிநாட்டு பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். இன்று காலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கோத்தபாய ராஜபக்சே சந்தித்து பேசினார்.
இரவோடு இரவாக ஆப்கானுக்கு சீக்ரெட் ட்ரிப் அடித்த டிரம்ப்.. விரைவில் தாலிபான்களுடன் சந்திப்பு.. ஏன்?
அதன்பின் பிரதமர் மோடியை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்தார். இவர் 2 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். பல்வேறு விஷயங்கள், இலங்கை குண்டுவெடிப்பு, இரண்டு நாட்டு உறவு, தமிழர் பிரச்சனை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு நாட்டு தலைவர்களும் பேசினார்கள்.
இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். அதில், இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோத்தபய ராஜபக்சே அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்.
இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த @GotabayaR அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை - இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும். pic.twitter.com/I8O2R2po08
— Narendra Modi (@narendramodi) November 29, 2019
இலங்கை - இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும். அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த டிவிட்டை பிரதமர் மோடி தமிழில் செய்துள்ளார். இவரின் இந்த டிவிட்டிற்கு மதிமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.