வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை!
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விக்ரம்ஜித் சென் தேர்தல் ஆணையத்துக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், மானியத் தொகை பெறுவது, கேஸ் புக் செய்வது என பலவற்றிற்கும் இன்றியமையாததாகிவிட்டது ஆதார் அட்டை. அரசின் உதவிகளை பெற நமது ஆதார் எண்ணை போட்டாலே போதும் நம் வங்கிக்கணக்கு, வீட்டில் எத்தனை சிலிண்டர் உள்ளது போன்ற நம்மை குறித்த அத்தனை தகவல்களும் வந்து விழும்.
இந்நிலையில் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தால் வாக்குப்பதிவில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கலாம் என கூறியுள்ளார் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென். சமூக விரோதிகள் பலவந்தமாக வாக்களிப்பதை இதன்மூலம் தடுக்கலாம் என்றும் விக்ரம்ஜித் சென் கூறியுள்ளார்.
இரட்டை வாக்களிப்பு
ஒரு தனித்துவமான வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தால் இரட்டை வாக்களிப்பு தவிர்க்க முடியும் என்றும் இந்த இரு அடையாள அட்டைகளையும் இணைப்பதன் மூலம், நாட்டில் சட்டவிரோதமான வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யலாம் என்றும் விக்ரம்ஜித் சென் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கட்டாயமாக இணைக்க வேண்டும்
அடுத்த தேர்தலில், ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்றும் விக்ரம்ஜித் சென் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்தை முறை வெளிப்படையான மற்றும் வலுவானதாக இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் முயற்சி
தேர்தல்களில் வாக்குப்பதிவு முறைகேடுகளை தடுக்கும் வகையில் இரு அடையாள அட்டைகளையும் இணைத்து ஆய்வு செய்ய இருப்பதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் முடிவு
கடந்த ஆண்டு, பான் கார்டுகள் மற்றும் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய மற்றும் நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை 12 இலக்க பயோமெட்ரிக் எண்ணுடன் கட்டாயமாக இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.