புதுசா உதயமான யூனியன் பிரதேசம்.. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்கும்? வேறுபாடுகள் என்ன?
Recommended Video
டெல்லி: புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு- காஷ்மீர், புதுவை யூனியன் பிரதேசத்துக்கான ஆட்சி, அதிகாரங்களையே பின்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிவிட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதன் மூலம் மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீர் இழந்தது.
ஜம்மு காஷ்மீர், சட்டசபையுள்ள யூனியன் பிரதேசமாகவும் லடாக் சட்டசபை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாறுகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதனால் டெல்லி, புதுவையை போல் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகிறது ஜம்மு காஷ்மீர்.
அதிகாரி தகவல்
யூனியன் பிரதேசமாக செயல்படவுள்ள ஜம்மு- காஷ்மீரின் ஆட்சி அதிகாரங்கள் எப்படி இருக்கும் என உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா ஆங்கில தளத்துக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறுகையில் புதுவை யூனியன் பிரதேசம் எப்படி செயல்படுகிறதோ, அது போன்றே ஜம்மு- காஷ்மீரும் செயல்படும். புதுவைக்கு இருக்கும் அதே அதிகாரங்கள், விதிமுறைகளையே ஜம்மு காஷ்மீரும் பின்பற்றும் என கூறியிருந்தார்.
முழுக்க முழுக்க
ஏன் புதுவையைத்தான் ஜம்மு காஷ்மீர் பின்பற்ற வேண்டுமா, டெல்லியை பின்பற்றக் கூடாதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவது தெரிகிறது. அதாவது டெல்லிக்கும் புதுவைக்கும் உள்ள பெரிய வித்தியாசமே காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பது என்பதுதான். டெல்லியில் காவல் துறை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
புதுவை அரசு
ஆனால் புதுவையில் காவல் துறை புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. எனவே புதுவையை போல் ஜம்மு காஷ்மீரும் செயல்படும். இங்கு புதுவையை போல் ஒரு துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படுவார். அது போல் ஜம்மு காஷ்மீருக்கு எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சிறப்பு பிரதிநிதிகள், செயலாளர்கள், காவல் துறை இயக்குநர் ஆகியோர் இருப்பர்.
டெல்லி உயர்நீதிமன்றம்
புதுவையில் உயர்நீதிமன்றம் இல்லை. எனவே புதுவை தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் உயர்நீதிமன்றம் இருக்கிறது. அது தொடரும் என்பது தெரியவில்லை. ஒரு வேளை புதுச்சேரியின் நிர்வாகத்தையே ஜம்மு காஷ்மீருக்கும் பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்திருந்தால் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்.
3 யூனியன் பிரதேசங்கள்
அந்தமான் நிகோபார், சண்டீகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள், லடாக் ஆகிய ஆறும் சட்டசபை இல்லாமல் இயங்கும் யூனியன் பிரதேசங்களாகும். அது போல் டெல்லி, புதுவை, ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்றும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களாகும்.