நட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்!
பாஜகவின் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யபட்டாலும், அமித் ஷாதான் இப்போதும் பாஜக கட்சியின் பிக்பாஸ் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video
டெல்லி: பாஜகவின் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யபட்டாலும், அமித் ஷாதான் இப்போதும் பாஜக கட்சியின் பிக்பாஸ் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருந்த ஜே.பி நட்டா இன்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இன்று தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நட்டா போட்டியின்றி தலைவராக தேர்வானார்.
ஆனால் பாஜகவில் அமித் ஷாதான் இப்போதும் முக்கியமான முடிவுகளை எடுக்க போகிறார் என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம் என்னதான் ஜெ.பி நட்டா தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டாலும், அமித் ஷாவின் கையே ஓங்கி இருக்கும். முக்கிய விஷயங்களில் அவரின் தலையீடு அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு!
பாஜக விதி
பாஜக கட்சிக்குள் ஒரு முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. அந்த கட்சியில் ஒரு நபர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். ஆட்சியில் பதவி கிடைத்தால் கட்சியில் பதவி கிடைக்காது.கட்சியில் பதவி கிடைத்தால் ஆட்சியில் பதவி கிடைக்காது. இதை பல வருடங்களாக பாஜக கட்சி மிக தீவிரமாக பின்பற்றி வருகிறது. ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்காக இந்த விதி கொஞ்சம் தளர்த்தப்பட்டது.
என்ன மாறியது
அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தாலும் தற்போது பாஜகவின் தேசிய தலைவராக இருந்தார். இப்படி அவர் இரண்டு பதவிகளை வகித்து வந்ததை சிலர் மறைமுகமாக சுட்டிக்காட்டி வந்தனர். ஆனால் அவரை யாரும் எதிர்க்கவில்லை. இருந்தாலும் அமித் ஷாவிற்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் செயல் தலைவரை நியமனம் செய்தார்.
எப்படி செயல்படுகிறார்
தற்போது செயல் தலைவர் ஜே. பி நட்டா தலைவராக பதவி ஏற்றுள்ளார். ஆனால் தற்போதும் பாஜகவை மொத்தமாக அமித் ஷா கட்டுப்படுத்தி வருகிறார். பாஜகவின் சூப்பர் பவராக அமித் ஷா இருப்பார். நட்டாவை அமித் ஷா பின்னிருந்து இயக்க போகிறார். கட்சிக்குள் அனைத்தையும் எப்போதும் போல அமித் ஷா கட்டுப்படுத்த போகிறார், என்று கூறுகிறார்கள்.
நட்டா எப்படி
நட்டாவும் அமித் ஷாவிற்கு மிகவும் விசுவாசமான நபர். மோடி, அமித் ஷா ஆகியோர் கண்ணை மூடிக்கொண்டு நட்டாவை நம்பலாம். அந்த அளவிற்கு நட்டா, இவர்கள் இருவரின் பேச்சை கேட்பார். கட்சியின் அடிப்படை பணிகளை மட்டும், நட்டா கவனித்துக் கொள்வார். முக்கிய பணிகளை ஷாதான் எடுப்பார் என்று கூறுகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது.
என்ன காரணம்
அதன்படி 2021ல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அப்போது தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிடுகிறது. இரண்டு மாநிலங்களையும் பாஜக மிக முக்கியமானதாக பார்க்கிறது. அதுவரை முக்கியமான அரசியல் முடிவுகளை அமித் ஷா தான் எடுப்பார். தலைவரின் மற்ற பணிகளை நட்டா கவனித்துக் கொள்வார் என்று கூறுகிறார்கள்.
செய்ய மாட்டார்
நட்டாவும் அமித் ஷாவை மீறி எதையும் செய்ய மாட்டார் என்கிறார்கள். நட்டா பல வருடமாக அமித் ஷாவின் டீமில் தேர்தல் பணிகளை செய்து இருக்கிறார். அப்போதில் இருந்தே அமித் ஷாவின் சொல்படி நடந்து பழகியவர்தான் நட்டா. தற்போது பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அமித் ஷா தனது பதவியை நட்டாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் பதவியை கொடுத்தவர், பவரை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுகள்
டெல்லி தேர்தல் பணிகளை மட்டும் நட்டா நேரடியாக கவனிப்பார். டெல்லி தேர்தல் நட்டாவிற்கு கட்சி தலைமை வைக்கும் டெஸ்ட் என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ரிமோட் மூலம் சோனியா இயக்குகிறார் என்று பாஜக கூறியது. தற்போது அந்த ரிமோட் அமித் ஷாவிடம் சென்றுள்ளது.. அமித் ஷாவிற்கு ஏற்றபடி ஆடும் நபராக நட்டா உருவெடுத்துள்ளார்!