ம.பி., ராஜஸ்தான் எம்எல்ஏக்களுக்கு காத்து கிடக்கும் ஜாக்பாட்.. குஷியில் வெற்றியாளர்கள்!
டெல்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அடுத்து யாருடைய ஆட்சி என்பதில் தெளிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை இழுக்கும் குதிரை பேரம் சூடு பிடிக்கவுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக சுயேச்சைகள், பிற கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவர்களை வளைக்க பாஜக முயற்சிக்கும் என்பதாலும், காங்கிரஸும் வளைக்கப் பார்க்கும் என்பதாலும் பணம் கோடிக்கணக்கில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பலம் இல்லை
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. அங்கு ஆட்சியமைக்க தேவையான பலம் 116 ஆகும். ஆனால் இதுவரை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் அந்த பலம் கிடைக்கவில்லை.
திடீர் கிராக்கி
இரு மாநிலங்களிலும் சுயேச்சைகள் கணிசமாக வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட குட்டிக் கட்சிகளும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. இவர்களுக்குத்தான் இப்போது திடீர் கிராக்கி கூடியுள்ளது.
தெளிவில்லை
ராஜஸ்தானைப் பொறுத்தவரை அங்கும் யாருக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் அங்கும் இழுபறி நிலவுகிறது. யார் ஆட்சியமைக்கப் போவது என்பதும் தெளிவில்லை.
காங்கிரஸ் ஆட்சி
பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சியமைக்கும் சாத்தியம் ம.பியில் உள்ளது. அதாவது தனக்குத் தேவையான எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்க அது முயலலாம். அதேசமயம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த சாத்தியம் அதிகம் உள்ளது.
கிராக்கி
பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே ஆட்சியமைக்க முயலும் என்பதாலும், அதிக அளவில் பணத்தை வாரியிறைக்க இரு கட்சிகளும முயலும் என்பதாலும் இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை உள்ளிட்ட எம்.எல்ஏக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. குதிரை பேரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.