மோடி-ஜெகன் மோகன் ரெட்டி 40 நிமிட சந்திப்பு.. பாஜக கூட்டணியில் இணைய பிளான்.. பின்னணியில் செம திட்டம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளது, அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆந்திரா முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற நாள் முதல், மத்திய பாஜக அரசை பெரிதாக விமர்சனம் செய்வது கிடையாது. எனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொள்ளப் போகிறது என்று கடந்த 8 மாதங்களாக பேச்சு அடிபடுகிறது.
இதற்கு இடையேதான் திடீரென இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க போவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தது முதல், இந்த யூகங்களுக்கு இறக்கை முளைத்தது.
ஜெகன் மோகன் ரெட்டி- மோடி சந்திப்பு
திட்டமிட்டபடியே இன்று டெல்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 40 நிமிடங்கள் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது கடப்பா ஸ்டீல் தொழிற்சாலை உட்பட கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி வழங்குமாறு மோடியிடம் அவர் கேட்டுக்கொண்டதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. போலாவரம் திட்டத்திற்காகவும், கர்னூல் மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் அமைப்பதற்காகவும் 3250 கோடி ரூபாய் நிதி வழங்க ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் ஆதரவு
இதெல்லாம் அரசு தரப்பில் வழக்கமாக தெரிவிக்கப்படும் அறிவிப்புகள் தான் என்றாலும், அரசியலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாஜக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் சமீபத்தில் வெளியேறியது. விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விடை பெற்றது அந்த கட்சி. இந்த நிலையில்தான் மாநிலங்களவையில் தங்களுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதை உணர்ந்துள்ள பாஜக, ராஜ்யசபாவில் 6 எம்பிக்களை கொண்டுள்ள, ஜெகன்மோகன் ரெட்டியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளை முன்னெடுக்க தொடங்கியது. ஏற்கனவே அந்த திட்டத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி திட்டம்
விவசாய மசோதாவை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருகிறது. மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலின் போது பாஜகவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் முழு ஆதரவு வழங்கினார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு என்ன ஆதாயம் என்று கேட்கிறீர்களா? ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய இருக்கிறது.
மத்திய அமைச்சர் பதவிகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இணைந்தால் அந்த கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கு மத்திய அமைச்சர்கள் பதவியும், ஒரு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாம். இதுதவிர ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தார் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார்கள்.
சிபிஐ விசாரணைகள்
ராஜசேகர ரெட்டி ஆட்சியின்போது முறைகேடாக ஒப்பந்தங்கள் பெறப்பட்டதாகவும் அதற்கு கைமாறாக ஜெகன்மோகன் ரெட்டியின் நிறுவனங்களின் முதலீடுகள் வந்து புரிந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டு பற்றியும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் ஜெகன்மோகன் ரெட்டி சேரவிரும்புவதற்கான அர்த்தத்தை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சந்திரபாபு நாயுடுவிற்கு நெருக்கடி
மற்றொரு பக்கம், பாஜகவை மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் முறைகேடாக நிலம் வாங்கிய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்து வருகிறார். அப்படி சிபிஐ விசாரணை ஆரம்பித்தால் சந்திரபாபு நாயுடுவுக்கு குடைச்சல் கொடுக்கலாம். இதுவும் ஜெகன்மோகன் ரெட்டி திட்டம். இதனால்தான் தொடர்ந்து மத்திய அரசு செய்யும் எந்த ஒரு விஷயத்துக்கும் விமர்சனம் செய்யாமல் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட ஆதாயங்களைப் பெறலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.