எங்கள் மீதா தாக்குதல்.. பழி வாங்கியது இந்திய ராணுவம்.. 100 மணி நேரத்திற்குள் மொத்தமும் காலி
Recommended Video
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலை படை தாக்குதல் நடத்திய 100 மணி நேரங்களுக்குள் அந்த மாநிலத்தில் இருந்து தீவிரவாத அமைப்பின் தலைமை முற்றிலுமாக வேரறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
சின்னார் காப்ஸ்சின், கார்ப்ஸ் கமாண்டர் கன்வால் ஜீத் சிங் தில்லான், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் தலைவர்கள் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் மீது ராணுவம் தொடர்ச்சியாக 16 மணிநேரங்கள் என்கவுண்டர் நடத்தியது. இதில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி கம்ரான் உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் நமது படையினர் மீது தாக்குதல் நடத்திய 100 மணி நேரத்திற்குள் காஷ்மீரில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் அனைத்து தலைவர்களும் துடைத்தெறியப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி தூக்கினால் நடப்பதே வேறு
யாராவது ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி தூக்கினால் உடனடியாக அவர்கள் கொன்று ஒழிக்கப்படுவார்கள். காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களது மகன்கள் தீவிரவாதிகளின் மூளைச்சலவைக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். காஷ்மீரி சமூகத்தில் ஒரு தாய் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். எனவே இந்த கோரிக்கையை தாய்மார்கள் மூலமாக நான் முன்வைக்கிறேன்.
தாய்மார்களே
ஒருவேளை உங்கள் மகன் யாராவது, தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தால் அவர்கள் மீண்டும் தேசிய நீரோடையில் கலந்துவிட வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்த வேண்டும். அல்லது இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக, அவர்களை, ராணுவம் முற்றிலுமாக அழித்து விடும்.
தேடித் தேடி ஒழித்துள்ளோம்
காஷ்மீரில் இப்போது நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளது. இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களை உடனடியாக நாங்கள் தேட ஆரம்பித்தோம். இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதிகளால் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவேதான் ஜெய்ஷ்-இ-முகமது தளபதிகளை தேடி தேடி அழித்து, ஒழித்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னணி
கடந்த 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்த பஸ் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.