ஆத்திரத்தில் ஜெய்ஷ் இ முகமது... இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானில் புகுந்து பதில் தாக்குதல் நடத்தியதால் ஆத்திரம் அடைந்திருக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புல்வாமா தாக்குதலுக்கு முதல் தாக்குதலாக பாலகோட் மற்றும் சக்கோதி, முசாபராபாத் பகுதிகளில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை அதிரடியாக புகுந்து தாக்குதலை நடத்தியது. மிராஜ்-2000 ரகத்தின் 12 போர் விமானங்கள், சுமார் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தின.
இந்தியாவின் இந்த முதல் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. லேசர் ரக குண்டுகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 300 தீவிரவாதிகள் வரை இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தாக்குதல் குறித்து, இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால்... இந்திய போர் விமானங்கள் பாலகோட் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தயார் நிலை
பாகிஸ்தானின் எதிர் தாக்குதலை சமாளிக்க, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அனைத்து வான்வெளி பாதுகாப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
தாக்குதல் நடத்துமா பாக்?
தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது.
மாநிலங்கள் உஷார்
அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா அல்லது மும்பை பாணியில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர்,டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு
மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களும் அலர்ட் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தீவிரம்
முக்கிய பகுதிகளிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அதுதவிர... நாட்டின் முக்கியமான நினைவு சின்னங்கள், வரலாற்று பகுதிகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பை அதிகரிக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.