ஜெய்சங்கர்.. அப்பவே வெளியுறவு கொள்கையில் 'கறார்' ... இப்ப மத்திய அமைச்சர்... அண்டை நாடுகள் 'வெலவெல'
Recommended Video
டெல்லி: வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியதில் கடும் கண்டிப்பை காட்டிய ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்கிறார். இதனால் வாலாட்ட நினைக்கும் அண்டை நாடுகள் வெலவெலத்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய வெளியுறவுத் துறையில் தொடக்க காலத்தில் ஜி. பார்த்தசாரதியின் சிஷ்யராக இருந்தவர் ஜெய்சங்கர். 1980களில் தாரப்பூர் அணு மின்நிலையங்களுக்கான எரிபொருள் தொடர்பான அமெரிக்கா விவகாரங்களை திறம்பட கையாண்டவர்.
அதேபோல் 1988-90ம் ஆண்டு காலத்தில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் முதன்மை செயலராக பணிபுரிந்தார் ஜெய்சங்கர். அப்போதுதான் இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். இவர்தான் அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.
நரேந்திர மோடி 2.0... சமூக வலைதளப் பக்கங்களில் புதிய மாற்றம்
மோடியின் இதயத்தில் இடம்
குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளைத் தொடர்ந்து அவருக்கு விசாவை அமெரிக்கா வழங்க மறுத்தது. 2014-ல் மோடி பிரதமரான போது அமெரிக்காவுடன் போராடி மோடிக்கு விசாவை பெற்றுக் கொடுத்தவர் ஜெய்சங்கர். அப்போது முதலே மோடியின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார் ஜெய்சங்கர்.
யு.எஸ்.- இந்தியா ஒப்பந்தம்
2004-2007-ம் ஆண்டில் வெளியுறவுத் துறையில் அமெரிக்கா விவகாரங்களை கவனித்து வந்தார் ஜெய்சங்கர். அவரது காலத்தில்தான் இந்தியா- அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2013-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கு ஜெய்சங்கர் பெயர் அடிபட்டது. ஆனால் சீனா, சிங்கப்பூர் நாடுகளுக்கான தூதரானார் ஜெய்சங்கர்.
ஊடுருவிய சீனாவுக்கு பதிலடி
சீனாவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றிய காலத்தில் இருநாடுகளின் உறவு மேம்படுவதற்கு முயற்சிகளை மேற்கொணார் ஜெய்சங்கர். குறிப்பாக 2013-ம் ஆண்டு லடாக்கில் சீனா ஊடுருவலை மேற்கொண்டது. அதே காலத்தில் சீனா அதிபர் இந்தியாவுக்கு வருகை தர இருந்தார். லடாக்கில் இருந்து சீனா படைகள் வெளியேறினால்தான் சீனா அதிபர் இந்தியாவுக்கு வர முடியும் என மிரட்டல் விடுத்து பணியவைத்தார் ஜெய்சங்கர்.
நேபாளத்தை நடுங்கவைத்தவர்
2015-ம் ஆண்டு மோடி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை செயலராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. சீனாவுக்கு இடம் கொடுத்திருந்த நேபாளம், பெருவெள்ளத்தில் சிக்கிய போது ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவின் பக்கம் திருப்பியதில் ஜெய்சங்கரின் பணி முக்கியமானது.
அண்டை நாடுகள் அச்சம்
தற்போது மோடி அரசில் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை சுமார் 40 ஆண்டுகாலமாக கையாண்ட அனுபவமிக்கவர் என்பதால் நமக்கு இணங்கிவராத நம்மை சார்ந்திருக்கும் அண்டை நாடுகள் அச்சம் கொள்ளவே செய்யும் என்பது அரசியல் பார்வையாலர்கள் கருத்து.
இந்தியாவின் பிடிமானம்
தற்போதைய நிலையில் இலங்கை, மாலத்தீவுகள், நேபாளம் ஆகியவை சீனா பக்கம் சாய்ந்து நிற்கின்றன. குறிப்பாக இலங்கையும் மாலத்தீவும் முழுமையாக சீனாவின் காலனி நாடுகளாகிவிட்டன. இந்த நாடுகளில் இந்தியாவுக்கு இருந்த பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இழந்த பிடிப்பை ஜெய்சங்கர் மீட்டுக் கொடுப்பார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாகும். அதேபோல் என்னதான் நம்மை சார்ந்த தேசமாக இருந்தாலும் பூடானிலும் சீனா ஆதரவு போக்கு தலைதூக்குகிறது. இதை கட்டுப்படுத்தி முழுமையாக இந்தியா சார்ந்த ஒருநாடாக பூடானை கொண்டு வரும் பெரும் பொறுப்பும் ஜெய்சங்கருக்கு இருக்கிறது.