இந்தாங்க எடுத்துக்கோங்க.. அனைத்து கடன்களையும் திரும்ப செலுத்துவதாக மல்லையா திடீர் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: 9,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா, வாங்கிய கடன்களை முழுவதுமாக செலுத்தப்போவதாக தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் மல்லையா இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது.
|
எடுத்துக்கொள்ளுங்கள்
இந்த நிலையில், ட்விட்டரில் மல்லையா கூறியுள்ளதாவது: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்பது நல்ல நிறுவனம், எங்களுக்கு விமானத்திற்கு தேவைப்படும் எரிபொருள் மிக அதிகமான விலைக்கு அதாவது பேரலுக்கு சுமார் 140 அமெரிக்க டாலர் வரை கொடுத்து வாங்கியதால் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதுவே வங்கி பணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியாததற்க்கு முக்கிய காரணம். நான் இப்பொழுது 100% வாங்கிய கடன்களை செலுத்த தயார். எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
புலம்பும் மல்லையா
பிரதமர் மோடிக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில், கடன்களை அடைக்க தான் எல்லா வித முயற்சியும் செய்து வருவதாக விஜய் மல்லையா குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தனது நிறுவனம் நாட்டின் கஜானாவிற்க்கு கடந்த முப்பது வருடங்கள் வருவாய் ஈட்டி தந்ததாகவும், தனது பிரபலமான நிறுவனத்தை இந்தநாடு இழந்துவிட்டதாகவும் மற்றொரு ட்வீட்டில் மல்லையா கூறியுள்ளார்.
வெற்றி
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு நேற்று நாடு கடத்தப்பட்டார். சட்டப் போராட்டத்தில் இந்தியாவின் வெற்றிாக இது பார்க்கப்படுகிறது.
திடீர் பல்டி
இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களுக்குள், விஜய் மல்லையா இப்படி ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். சட்டத்தின் பிடியில் தப்ப முடியாது என்ற சூழ்நிலை வந்ததும், நல்லவரை போல மல்லையா பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.