துப்பாக்கிச் சூடு.. என்ன நடக்கிறது டெல்லியில்...கெஜ்ரிவால் ஆவேசம்.. நடவடிக்கை எடுப்போம்.. அமித் ஷா
டெல்லி: டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே இன்று குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக மாணவர் போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்ட கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், பொதுமக்களும் இன்று மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் ஜாமியா பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்டரில்: ஜாமியா பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் நான் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளேன். இது போன்ற சம்பவங்களை அரசு ஒருநாளும் சகித்துக்கொள்ளாது. தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
இந்த முறை டெல்லியில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ये दिल्ली में क्या हो रहा है? दिल्ली की क़ानून व्यवस्था बिगड़ती जा रही है। कृपया दिल्ली की क़ानून व्यवस्था को सम्भालिये https://t.co/jtBtDqncND
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 30, 2020
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமியா துப்பாக்கிச்சூடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் என்ன நடக்கிறது? சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கை கவனித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெல்லி சட்டம் ஒழுங்கு துறை, மத்திய அரசின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.