காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா..லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேறியது!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா இன்று லோக்சபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா இன்று லோக்சபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
நேற்று காலை அதிரடி திருப்பமாக ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாகி பிரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
நேற்று என்ன
இந்த இரண்டு மசோதாக்களை நேற்று மத்திய அரசு வெற்றிகரமாக ராஜ்யசபாவில் நிறைவேற்றியது.திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதிமுக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் நேற்று இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின.
பெரும் விவாதம்
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இன்று இந்த மசோதா மீதான விவாதம் நடக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மசோதா மீதான அறிமுக உரையை அமித் ஷா நிகழ்த்திய பின் அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
என்ன எதிர்ப்பு
திமுக , காங்கிரஸ் கட்சிகள் லோக்சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது. முக்கியமாக திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். காங்கிரஸ், திமுக, ஜேடியு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை எதிர்த்தது. பாஜக, அதிமுக, பகுஜன் சமாஜ் , ஆம் ஆத்மி கட்சி மசோதாவை ஆதரித்தது. திரிணாமுல் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.
தேவை
லோக்சபாவில் பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. ஆகவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா லோக்சபாவில் எளிதாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக லோக்சபா வர வேண்டும் என்று விப் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
விப்
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 367 வாக்குகளும், எதிராக 67 வாக்குகளும் லோக்சபாவில் பதிவாகியது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியுள்ளது.
இதனால் அவையில் இன்று எல்லா பாஜக உறுப்பினர்களும் இடம்பெற்று இருந்தனர். இதனால் பாஜக பெரும்பான்மை பலத்துடன் மசோதாவை நிறைவேற்றியது. இதன் மூலம் காஷ்மீர் மசோதா அமலுக்கு வந்துள்ளது.