'370' ஐ ரத்து செய்தது 'பேரழிவு நடவடிக்கை'.. நாடு சிதறுண்டு போய்விடும்.. ப சிதம்பரம் கடும் வார்னிங்
டெல்லி: அரசியல் சாசன பிரிவு 370 ஐ நீக்கியது பேரழிவு நடவடிக்கை என்றும் இந்த நாள் இந்தியாவின் அரசியலமைப்பு வரலாற்றில் கருப்பு நாள் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது பிரிவினை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே பேட்டி அளித்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் ஏதோ தவறான நடவடிக்கையை எடுக்க போகிறார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி ஒரு பேரழிவு நடவடிக்கையை செய்வார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரை போல பிற மாநிலங்களும் பிரிக்கப்படலாம். மோடி அரசு நீடித்தால் நாடு சிதறுண்டு போய்விடும். இந்த நாள் இந்தியாவின் அரசியலமைப்பு வரலாற்றில் கருப்பு நாள்" இவ்வாறு கூறினார்.
இதையடுத்து பேசிய குலாம் நபி ஆசாத், பாஜக வாக்கு வங்கிக்காக ஜம்மு காஷ்மீருக்கான அந்தஸ்தை ரத்து செய்துவிட்டது. காஷ்மீர் மாநிலத்தின் ஒற்றுமையுடன் நேர்மையுடன் பாஜக விளையாடுகிறது என கடுமையாக விமர்சித்தார்.