எல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி துப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மரணம்
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, இந்திய ராணுவ நிலைகள் மற்றும், கிராமங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட ராணுவ வீரர் நாயக் ரவி ரஞ்சன் குமார் சிங் (36) என்றும், பீகார் மாநிலத்தின், ரோக்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததையும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததையும் தொடர்ந்து பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய நடவடிக்கையால் கோபத்திலுள்ள பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்துள்ளது.
கிருஷ்ணாகாட்டி, செக்டாரில், எல்லைக்கோட்டைத் தாண்டி காலை 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது.
பாதுகாப்பு துறை சார்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "நாயக் ரவி ரஞ்சன் குமார் சிங் ஒரு துணிச்சலான, மிகவும் ஊக்கம் கொண்ட மற்றும் நேர்மையான வீரர். இந்த நாடு எப்போதுமே அவரின் உயர்ந்த தியாகம் மற்றும் கடமைக்காக கடன்பட்டிருக்கும். போர் நிறுத்த மீறல்களுக்கு இந்திய ராணுவம் கடுமையாகவும் திறமையாகவும் பதிலளித்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ நிலைகளுக்கு கடும் சேதம் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.