தெஹ்ரீக் உல் முஜாகிதீன் இயக்கத்துக்கு இன்று முதல் தடை… அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்
டெல்லி:ஜம்மு காஷ்மீரிலிருந்து செயல்படும் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு இன்று முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டியூஎம் எனப்படும் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் என்ற அமைப்பு காஷ்மீர் விடுதலைக்காக 1990ம் ஆண்டு ஜூன் மாதம் யூனுஸ்கான் என்பவரால் துவக்கப்பட்டது. அந்த அமைப்பு தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறி அந்த அமைப்பு தடை விதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:காஷ்மீர் விடுதலைக்காக தொடங்கப்பட்ட தெஹ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
அந்த அமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர். வெளிநாட்டு நிதி மூலம் பல்வேறு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
மேலும் பல இளைஞர்களை மூளை சலவை செய்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசவும், செயல்படவும் ஊக்குவித்து தவறாக வழி நடத்துகின்றனர். தொடர்ந்து, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.