காஷ்மீர் வழக்கு.. ராணுவ கட்டுப்பாட்டை தளர்த்த உத்தரவிட முடியாது.. உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு!
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் போடப்பட்டு இருக்கும் ராணுவ கட்டுப்பாடுகளை நீக்கும்படி இப்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. கடந்த 73 வருடங்களாக காஷ்மீருக்கு இந்த 370வது சட்டப்பிரிவுதான் பெரிய அளவில் சிறப்பு அதிகாரம் வழங்கி வந்தது.
காஷ்மீர் பிரச்சனை பூதாகரமாக வெடிக்காமல் மிதமாக சென்று கொண்டு இருக்கவும் கூட இதுதான் காரணமாக இருந்தது. தற்போது அந்த சிறப்பு அதிகாரத்தையே மத்திய அரசு நீக்கி இருக்கிறது.
ஸ்ஸப்பா.. உங்களுக்கு என்னதான் வேண்டும்?.. காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
என்ன வழக்கு
இதனால் காஷ்மீரில் கடந்த வாரம் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்போதும் காஷ்மீர் எல்லையில் அதிக அளவில் ராணுவம் நிறுத்தப்பட்டு வருகிறது. அங்கு உள்ள அரசியல் தலைவர்கள் எல்லோரும் இப்போதும் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்தது
வழக்கறிஞர் எம். எல். சர்மா, காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் என்று நிறைய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில் வழக்கறிஞர் எம். எல். சர்மா, காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் ஆகியோரின் வழக்குகள் உட்பட 5 மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது.
என்ன கோரிக்கை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதில் காஷ்மீரில் விதிக்கப்பட்டு இருக்கும் எமர்ஜன்ஸிக்கு நிகரான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அனுராதா மனு
இந்த வழக்கில் மனுதாரர் அனுராதா பாஸின் தரப்பில் வாதம் செய்த வழக்கறிஞர், காஷ்மீரில் தற்போது போன் இணைப்பு இல்லை. செய்தியாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. அங்கு சர்வாதிகாரம் போன்ற நிலை நீடிக்கிறது என்று வாதம் செய்தார்.
அரசு பதில்
இதையடுத்து அரசு வழக்கறிஞர் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தார், காஷ்மீரில் களநிலவரம் எங்களுக்குத்தான் தெரியும். அங்கு ராணுவம் கலவரம் ஏற்படாமல் தடுத்து வருகிறது.மக்களும், நிர்வாகிகளும், செய்தியாளர்களும் நமது பாதுகாப்பு படையை நம்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நம்பிக்கை
இதற்கு உச்ச நீதிமன்றம் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.அங்கு சரியான சூழ்நிலை உருவாக நாம் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அங்கு ஏற்கனவே லேண்ட் லைன் போன்கள் வேலை செய்கிறது. அங்கு தொலைபேசி தொடர்பு விரைவில் மீண்டும் கொண்டு வரப்படும்.காஷ்மீர் விவகாரத்தில் இப்போது தலையிட முடியாது.
ஒத்திவைப்பு
காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை நாம் பொறுக்க வேண்டும். அங்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒரு வாரம் காத்திருப்போம். அதன்பின் பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் காஷ்மீர் வழக்கு மீதான அடுத்த வாரத்திற்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.