கூட்டணி வைத்து போட்டியிட்டால் கூட ஆன்டி இந்தியனா?.. அமித் ஷா விமர்சனம்.. காஷ்மீர் தலைவர்கள் பதிலடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இடையில் டிவிட்டரில் கடுமையான வார்த்தைப்போர் நடந்துள்ளது. காஷ்மீரின் முக்கிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்த தேர்தல்களை சந்திக்க இருப்பதை அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் காஷ்மீர் தலைவர்கள் இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளனர். இணையத்தில் இன்று காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது.
வரிசையாக டிவிட்கள் மூலம் காஷ்மீர் தலைவர்களை அமித் ஷா விமர்சனம் செய்தார். காஷ்மீரில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு சில வெளிநாடுகள் உதவி செய்வதாக அவர் விமர்சனம் செய்து இருந்தார்.
அமித் ஷா டிவிட்
காஷ்மீரில் மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா அமைத்து இருக்கும் கூட்டணிக்கு குப்கார் மக்கள் கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்கார் கூட்டணியை விமர்சனம் செய்து அமித் ஷா டிவிட் செய்துள்ளார். அதில், குப்கார் கேங் வெளிநாடுகளின் உதவியை பெறுகிறது. காஷ்மீர் விஷயத்தில் வெளிநாடுகளின் உதவியை கொண்டு வர அவர்கள் நினைக்கிறார்கள். இந்த குழுவிற்குதான் காங்கிரசும் ஆதரவு தருகிறது
மோசம்
ஜம்மு காஷ்மீரை பழைய இருண்ட காலத்திற்கு கொண்டு செல்ல குப்கார் குழு நினைக்கிறது. மீண்டும் தீவிரவாதம், மோதல்களை அதிகரிக்க நினைக்கிறார்கள். பெண் விடுதலை, தலித் விடுதலைக்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த கூட்டணி தேசிய நலனுக்கு எதிரான கூட்டணி. தேசத்தோடு ஒன்றாக பயணிக்க குப்கார் கூட்டணி முயல வேண்டும் , இல்லையென்றால் அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள், என்று அமித் ஷா விமர்சனம் வைத்து உள்ளார்.
பதிலடி
இதற்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மற்றும் முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். அதில், இதற்கு முன் எதிர்கட்சிகளை வன்முறையை தூண்டும் கூட்டம் என்று பாஜக தலைவர்கள் குறிப்பிட்டனர். இப்போது குப்கார் கூட்டணி என்று கூறுகிறார்கள். நாளுக்குள் நாள் பாஜகதான் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறது.. ஆனால் பாஜக மற்றவர்களை தேச விரோதிகள் என்று கூறுகிறது.
கூட்டணி
கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் கூட அது தேச விரோதமா? பாஜகதான் பல மாநிலங்களில் அதிகார பசியோடு கூட்டணிகளை அமைக்கிறது. நாங்கள் கூட்டணி அமைத்தால் தவறா? லவ் ஜிஹாத், துக்டே துக்டே கேங், குப்கார் கூட்டணி என்றெல்லாம் பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் அவர்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதே இல்லை, என்று மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
பாஜக எதிர்ப்பு
அமித் ஷாவின் கருத்துக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அளித்துள்ள பதிலில், பாஜகவை எதிர்த்தாலே அவர்களை தேச விரோதி, ஊழல்வாதி என்று பாஜக தலைவர்கள் முத்திரை குத்துகிறார்கள். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை மட்டும்தான் வீட்டு சிறையிலும் வைத்துவிட்டு, தேர்தலில் நிற்கும் ஒரே காரணத்திற்காக அவர்களை ஆன்டி நேஷனல் என்றும் பெயர் சூட்டுகிறார்கள். நாங்கள் வெறும் கேங் இல்லை, நாங்கள் முறையான தேர்தல் கூட்டணி. நாங்கள் தேர்தலை தொடர்ந்து சந்திப்போம் என்று கூறியுள்ளார்.