ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலில் ராஜ்யசபாவில்இதற்கான மசோதாவை தாக்கல் செய்த அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370 இனி செல்லாது என அறிவித்தார் . இதே மசோதாவை லோக்சபாவிலும் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சனை வெடிக்கலாம் என பீதி கிளம்பியுள்ளது. இதன் காரணமாகவே அங்கு பாதுகாப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக வெளிமாநிலத்தவர் அனைவரும் ஜம்மு காஷ்மீரை விட்டு கடந்த இரண்டு நாள்களாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது, அதற்கான சூழல்கள் குறித்து விளக்கம் அளித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நாளை மறுநாள் அதாவது 7ம் தேதி உரையாற்ற உள்ளார். அப்போது தான் காஷ்மீர் நிலவரம் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும்.