டெல்லி மோதல்கள்.. மாஜி ராணுவ வீரர்...80 வயது முதியவர் உட்பட 122 பேர் கைது
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்பட்ட டிராக்டர்கள் பேரணி மோதல் சம்பவங்கள் தொடர்பாக 122 பேரை கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். இவர்களில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான 80 வயது முதியவரும் ஒருவர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் காசிப்பூர், சிங்கு, திக்ரி எல்லைகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் பல லட்சம் டிராக்டர்கள் பேரணியை நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த டிராக்டர்கள் பேரணியில் ஊடுருவிய விசமிகளால் போலீசாருடன் பல இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன.
இம்மோதல்கள் தொடர்பாக இதுவரை 122 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 வயது முதியவரான குர்முக் சிங்கும் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருகும் சிறு விவசாயி குர்முக் சிங். ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் குர்முக் சிங்.
டெல்லி சிங்கு எல்லையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் முகர்ஜி நகர் போலீசார் குர்முக் சிங்கையும் கைது செய்திருக்கிறது. இதேபோல் சிறுவர்கள் பலரையும் டெல்லி போலீஸ் கைது செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.