மொத்த நாடும் ஒற்றை குரலில்.. சிலிர்க்க வைத்த இந்தியா.. மருத்துவ ஊழியர்களுக்காக கைதட்டி ராயல் சல்யூட்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ ஊழியர்கள் சேவையை பாராட்டும் வகையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக கை தட்டி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை, இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்த சுய ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், மாலை 5 மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு பால்கனி அல்லது ஜன்னலோரம் அல்லது வாசலிலாவது வந்து நின்று கை தட்ட வேண்டும், அல்லது சைரன் ஒலிக்க வேண்டும், அல்லது விசில் அடிக்க வேண்டும் என்பதுபோல கேட்டுக்கொண்டார்.
இது எதற்கு என்றால்.. இரவு பகல் பாராமல் இந்த வைரஸ் நோய் தாக்குதலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்க கூடிய மருத்துவ பணியாளர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய ஒரு நன்றிக்கடன். இதையேற்று 5 மணி முதல் இந்தியா முழுக்க மக்கள் தங்கள் வீட்டு வாசல், ஜன்னலோரம் போன்ற பகுதிகளில் வந்து கை தட்டி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பெல்லை அடித்து பாராட்டினார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கை தட்டி தனது நன்றியை தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மக்கள் வெளியே நின்றபடி கை தட்டியதை பார்க்க முடிந்தது. குடிசைப் பகுதிகளிலும், வயது வேறுபாடு இல்லாமல், ஆண்-பெண் பேதம் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் கை தட்டினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கள் வீட்டு இல்லங்களில், குடும்பத்தோடு கை தட்டி, மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.5 நிமிடம் போதும் என மோடி கூறியிருந்தாலும், கைதட்டல்கள் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
கொரோனா வைரஸ் பரவிவிடும் என்று அச்சப்பட்டு அனைவரும் வீடுகளுக்குள் இருக்கிறோம். ஆனால் பாதித்த நோயாளிகளுடன் தினமும் பழகி, சிகிச்சை அளித்து குணப்படுத்த கூடிய முக்கியமான ஒரு இடத்தில் இருப்பது மருத்துவ பணியாளர்கள். அவர்கள் கொஞ்சம் சோர்வடைந்தாலும், நாடு முழுக்க நோய் பாதிப்பு எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
நடமாடும் தெய்வங்கள் போல காட்சியளிக்கிறார்கள், மருத்துவர்களும், மருத்துவத் துறை ஊழியர்களும். இப்படியான சேவை செய்யும், மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுக்கு, நாம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும், இந்த ஒரு சிறு பாராட்டு முயற்சி, ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அதிகரித்து இன்னும் பணி செய்ய தூண்டும் என்பதால், இவ்வாறு அவர்கள் செய்தனர்.
ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் கை தட்டியபோது, அதிலிருந்து கிடைக்கக் கூடிய சிலிப்பு உணர்வு, மற்றும் பாசிட்டிவ் வைப்ரேசன் மிக அதிகமாக இருக்கும். அது இன்னும் மேலும் மேலும் அவர்களை பணி செய்ய ஊக்குவிக்கும். எனவே, அனைவரும் தவறாமல் இதைச் செய்தனர். உங்களது சமூகவலைத்தள பக்கங்களிலும் அதை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியாவின் ஒற்றுமையை உலகமே பார்த்து வியக்கும்.
#IndiaSalutes என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நீங்கள் கைதட்டும் வீடியோ, மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, மருத்துவர்களுக்கு, ஊக்கம் கொடுங்க.