48 மணி நேரத்தில் கொரோனா பரவுவது 100% ஆக அதிகரிப்பு.. மக்கள் ஊரடங்கு ஒரு வாரம் கட்டாயம் ஆகுமா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 315 ஐ எட்டியது. இன்று காலைக்குள் அது 324 ஆக உயர்ந்துள்ளது.
14 மணி நேர 'ஜனதா ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்த 48 மணி நேரத்திற்குள் 100 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே ஊரடங்கை ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டியது அவசியம் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
இது நாள் விரையில் இல்லாத அளவுக்கு நாட்டிலேயே ஒரே நாளில் கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்டோருக்கு அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களாக சீராக உயர்ந்து வந்த கோவிட் 19, கடந்த வெள்ளிக்கிழமை 50 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில். அது சனிக்கிழமை 100க்கும் மேல் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. .
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நான்கு பேர் இதுவரை இறந்துள்ளனர், சனிக்கிழமை மாலை நிலவரப்படி கொரோனாவில் இருந்து கிட்டத்தட்ட 23 பேர் குணமாகி உள்ளனர். இத்தாலி அல்லது பிற ஐரோப்பிய நாடுகளில் எப்படி கொரோனா வேகமாக பரவிய நிலையில் இருந்ததோ அப்படி ஒரு நிலையில் இந்தியா இப்போது உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா இப்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது.
அதன் பிறகு அதிவேகம்
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில், கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்கள் சீராக இருந்த நிலையில் மெதுவான எண்ணிக்கையில் அதிகரித்த பின்னர் திடீரென அதி பயங்கரமாக பரவியது. சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் 100 பேருக்கு ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கொரோனா வைரஸ் பரவிய எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியைக் கண்டது.
இந்தியா செய்ய வேண்டியது
சீனா மற்றும் தென்கொரியாவில் அரசுகள் தலையிட்டு கடுமையான சோதனைகளை அதிகரித்தது, ஒருவரிடம் இருந்து விலகியே இருக்க வைப்பது ( social distancing) போன்ற நடவடிக்கைகைளை மேற்கொண்டதன் மூலம், சீனாவும் தென் கொரியாவும் புதிய வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. மறுபுறம், ஐரோப்பாவில் உள்ள நாடுகள், குறிப்பாக இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவை அதை தடுப்பதற்காக கடுமையாக போராடுகின்றன. எனவே இந்தியாவும் இதே பாணியில் சோதனைகளை அதிகரிப்பது, சமூகத்தை தனிமைப்படுத்துவது போன்றவற்றை செய்வதுதான் ஒரே வழி என்கிறார்கள்.
கடும் பாதிப்பு
உலகளவில், கொரோனா வைரஸ் காரணமாக 13,000 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர், 3,00,000க்கு அதிகமானோருக்கு பரவி உள்ளன, ஐரோப்பாவில் தான் மோசமாக பாதித்துள்ளது. சீனாவில் 82,000 க்கும் மேற்பட்டோருக்கு பரவி உள்ளது. இந்த நோய்த்தொற்றிலிருந்து சீனா உள்பட உலகம் முழுவதும் 90,000 க்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். பிப்ரவரி மத்தியில் கொரோனா வைரஸ் இறப்புகளில் சீனா ஒரு உச்சநிலையைக் கண்டாலும், அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்த அந்த நாடு கடுமையான சோதனகளை செய்தது., இதன் விளைவாக அதிகம் பேரை காப்பாற்றியது. அதன் பின்னர் குறைந்த அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன.
1 சதவீதமே இறப்பு
ஆனால் அதேநேரம் தென் கொரியா, ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவுவதை தீவிரமாக கண்காணித்து சோதனைகளை அதிகப்படுத்தியது. சமூகத்தை விலக்கி வைத்தது, அத்துடன் உயிரிழப்பை தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியும் அத்தனையும் செய்தது. இதன் காரணமாக அங்கு மிகப்பெரிய அளவில் பரவிய போதும் 1 சதவீதம் அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்போது பரவுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் ஊரடங்கு
தற்போது இந்தியாவில கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இருமடங்காக அதிகரத்துள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பரவுவதை தடுக்க தற்போது பின்பற்றி வரும் சுய ஊரடங்கை ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.