பட்ஜெட் எதிர்பார்ப்பு... ஜனவரி ஜிஎஸ்டி வசூலில் சாதனை
டெல்லி : இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி.,யில் வரிச்சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ஜனவரி மாத வரி வசூல், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக ஜிஎஸ்டி வசூலானது ஒரு லட்சம் கோடி ரூபாயிக்கு மேலாக இருந்து வந்தது. கோவிட் 19 தாக்கத்திற்கு பிறகு பொருளாதார நிலை மெல்ல சீரடைந்து வருவதால் படிப்படியாக ஜிஎஸ்டி வசூலும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக உயர்ந்தது.
ஆனால் பிப்ரவரி மாதத்தின் தொடக்க நாளான இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ரூ.1.2 லட்சம் கோடி என்பதே உயர்ந்த வரி வசூலாக கருதப்பட்டது. தற்போது ஜனவரி மாத வரி வசூல் கிட்டதட்ட அதனை நெருங்கி விட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு ஜனவரி மாத வரி வசூல் 8 சதவீதம் அதிகம். அதாவது கடந்த ஜனவரியை விட இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.1.1 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் சரக்கு இறக்குமதியின் மூலம் பெற்ற வருவாயும் 16 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.