காந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு
டெல்லி: மறைந்த முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங், 1999ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, காந்தகார் விமான கடத்தல் சம்பவம் நடந்தது. அப்போது அவர் எடுத்த முடிவு இன்றளவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூலக்காரணமான மெளலானா மசூத் அஸார் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார், அகமது ஓமர் சயீத் ஷேக் ஆகிய 3 முக்கிய தீவிரவாதிகளை அழைத்துச் சென்று பயணிகளை மீட்டார்.
1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நேபாளத்தில் இருந்து டெல்லிக்குக் ஏர்இந்தியா விமானம் ( IC 814) புறப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ஹர்கத் உல் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஐந்து பேரால் கடத்தப்பட்டு, பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருளை நிரப்ப தீவிரவாதிகள் கோர, எரிபொருளுடன் கூடிய டிரக் பக்கத்தில் வந்தது.
ஆனால், அந்த டிரக்கை பஞ்சாப் போலீசார் ரன் வேயில் பாதியில் நிறுத்திவிட்டனர். எரிபொருள் நிரப்புவதை தாமதப்படுத்த முயன்றனர். ஆனால், இதனால் சந்தேகம் கொண்ட தீவிரவாதிகள் விமானத்தை உடனடியாக மேலும் டேக் ஆப் செய்ய வைத்தனர். இதையடுத்து அதை லாகூருக்குக் கொண்டு சென்றனர். அங்கு எரிபொருளை நிரப்பிவிட்டு, அங்கிருந்து விமானத்தை துபாய்க்கு கொண்டு சென்றனர் தீவிரவாதிகள்.
பாஜக கூட்டணிக்கு விவசாயிகளின் வேதனையை கேட்கும் அளவுக்கு செவித்திறன் இல்லை.. ஹர்சிம்ராத் கவுர்
காந்தஹார் கடத்தல்
அங்கிருந்து இறுதியாக ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் தரையிறக்கினர். தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்த நிலையில், முன்னதாக விமானம் அமிர்தசரஸை விட்டு வெளியேறியதை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்விகள் எழுந்தன.
குளறுபடி காரணம்
மத்திய அரசின் தவறான முடிவு மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் முடிவெடுப்பதில் எடுத்துக் கொண்ட தாமதமும், குளறுபடி காரணமாகவே விமானம் இந்தியாவை விட்டு வெளியேறியது. 7 நாள் நீடித்த இந்த விமானக் கடத்தல், முஷ்டாக் அகமது சர்கார், அகமது ஓமர் சயீத் ஷேக், மெளலானா மசூத் அஸார் ஆகிய 3 மூக்கிய தீவிரவாதிகளை இந்தியா விடுவித்த பின்னர் முடிவுக்கு வந்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலேயே விமானத்தை முற்றுகையிட்டு கமாண்டோ படையில் பயணிகளை மீட்டிருக்க முடியும்.
துபாய் அரசு
ஆனால் விமானம் கிளம்பி சென்ற பிறகே கடத்தல் விவகாரம் கமாண்டோ படைக்கு தெரிவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தீவிரவாதிகள் கடத்திய விமானத்தை துபாய் வரை விரட்டி சென்றும் விமானத்தை முற்றுகையிட கமாண்டோ படையால் முடியவில்லை. இதற்கு காரணம் துபாய் அரசு அனுமதி அளிக்கவில்லை. அமெரிக்காவும் உதவவில்லை
ஜஸ்வந்த் சிங் ஒப்படைத்தார்
பல முக்கிய தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய அதி பயங்கர நபர்களான முஷ்டாக் அகமது சர்கார், அகமது ஓமர் சயீத் ஷேக், மெளலானா மசூத் அஸார் ஆகியோரை தனி விமானத்தில் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு அழைத்து சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் ஒப்படைத்தார். இவர்கள் விடுதலைக்குப் பின்னர் பல முக்கிய தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் முக்கியமானது, பாகிஸ்தானில் டேணியல் பேர்ல் என்ற அமெரிக்கர் படுகொலை செய்யப்பட்டது. அதேபோல மும்பைத் தீவிரவாதத் தாக்குதல், 9/11 தாக்குதல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் இன்று வரை தீவிரவாதிகளை ஒப்படைத்த ஜஸ்வந்த் சிங்கின் முடிவு பெரும் சர்ச்சையாக உள்ளது.