சோறு ஊட்டும் கையையே கடிக்காதீர்கள்.. ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் ஆவேசம்
டெல்லி: இந்தி சினிமா உலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எம்பி ரவி கிருஷ்ணனுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும், மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்தார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட பிறகு, பாலிவுட்டில் போதைப்பொருள் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன.
சுஷாந்த் சிங் காதலி ரியா மீது போதை தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கன்னடத் திரையுலகிலும் முன்னணி நடிகைகள் மற்றும் கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம்.. நடிகை ரியாவின் சகோதரர் அதிரடியாக கைது.. பரபர தகவல்
பாகிஸ்தான், சீனா
இந்த நிலையில் லோக்சபாவில் நேற்று பேசிய போஜ்பூரி மற்றும் இந்தி திரை உலகின் முன்னணி நடிகரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியுமான ரவி கிஷன், இந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு இவர்களின் துணைகொண்டு செயல்பட்டு இந்திய இளைஞர்களை நாசமாக்குவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
தொழில்
ஜெயா பச்சன், இன்று ராஜ்யசபாவில் உரை நிகழ்த்தியபோது இதற்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அவர் கூறுகையில், ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த தொழிலையும் குற்றம் சொல்லக்கூடாது.
அதிர்ச்சி
லோக்சபாவில் நேற்று திரையுலகைச் சேர்ந்த ஒரு எம்பி பேசிய பேச்சை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். உங்களுக்கு உணவு ஊட்டும் கையை கடிப்பதற்கு இணையானது அந்த பேச்சு. அரசு, இப்போது திரைத்துறைக்கு ஆதரவாக நிற்க வேண்டும். பொழுதுபோக்குத் துறை என்பது மிகவும் முக்கியமானது.
அரசு ஆதரவு
சிலர் இந்த துறையில் பெயரை சம்பாதித்து விட்டு இப்போது அந்தத் துறையை குற்றம்சாட்டுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சினிமாத்துறை இழிவுபடுத்தப்படுகிறது. இந்த நாட்டில் அதிகமாக வரி செலுத்தக் கூடிய ஒரு சிலரில் சினிமா துறையை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே, அரசு சினிமா துறையினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.