கர்நாடக கூத்து.. ஆளும் ம.ஜ.த கட்சி பொதுச் செயலாளரே கட்சி தாவினார்.. குமாரசாமி சமாளிப்பு
டெல்லி: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த தனிஷ் அலி, திடீரென பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். தனிஷ் அலி, அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் தேவகவுடாவிற்கு தனிஷ் அலி நெருக்கமானவராக அறியப்பட்டவர் ஆகும். இந்த நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், திடீரென தனிஷ் அலி, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில் 20 தொகுதிகளில் காங்கிரசும், 8 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா கட்சியும் போட்டியிடுவது என்று கூட்டணியில் முடிவு எட்டப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், கொச்சியில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுத்ததில், தனிஷ் அலி முக்கிய பங்காற்றியவர்.
Danish Ali, the JDS General Secretary, has joined BSP in consent with me and our national president Sri HD Devegowda in a purely political arrangement between the two parties. It is a thoughtful political decision taken by #JDS and BSP to win more seats in the Loksabha elections.
— H D Kumaraswamy (@hd_kumaraswamy) March 16, 2019
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த பிறகு, நிருபர்களிடம் பேசிய தனிஷ் அலி, கூறும்போது, உத்தரபிரதேசம் நான் பிறந்த மாநிலம். நான் பணியாற்றியது கர்நாடகாவில். இப்போது உத்தரபிரதேசத்தில் அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மதவாதம் வளர்ந்து விட்டது. எனவே, நான் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து கட்சியை வளப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளேன். இதற்காக, தேவகவுடாவிடமும் ஆசி பெற்று வந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Lucknow: JD(S) General Secretary Danish Ali, who until recently was involved in alliance negotiations with Congress and JD(S), joins Bahujan Samaj Party (BSP). pic.twitter.com/tsvqqlofU6
— ANI UP (@ANINewsUP) March 16, 2019
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்த, தனிஷ் அலி, அந்த கட்சியின் டெல்லி முகமாக அறியப்பட்டவர். இதனிடையே கர்நாடக முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், எனது மற்றும் எனது தந்தை தேவகவுடாவின் முழு சம்மதத்துடன்தான், தனிஷ் அலி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார். இது முழுக்க முழுக்க இரு கட்சிகள் நடுவேயான தேர்தல் உடன்பாடு. லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வெல்வதற்காக மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.