மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இணைகிறது? பீகார் தேர்தலை முன்வைத்து பாஜக வியூகம்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) இணையக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது உறுதியாகவில்லை.
இடஒதுக்கீடு: எடியூரப்பா ஆட்சிக்கு மீண்டும் ஆபத்து... எஸ்.டி. எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா மிரட்டல்
ஜேடியூ-பாஜக தொகுதி பங்கீடு
இரு கட்சி தலைவர்களுமே தொகுதி பங்கீடு தொடர்பாக முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் கூட்டணியின் எதிர்காலம் விவாதப் பொருளாகி உள்ளது.
மத்திய அமைச்சரவையில் இடம்?
இந்நிலையில் ஜேடியூவை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சரவையில் அக்கட்சியின் 3 பேருக்கு இடம் கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டது ஜேடியூ.
பாஜகவுக்கு ஜேடியூ ஆதரவு
ஆனால் பாஜக இதனை நிராகரித்ததால் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோர் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். இதன்பின்னர் குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவை ஜேடியூ அளித்தது.
ஜேடியூவை தக்க வைக்க வியூகம்
அத்துடன் சட்டசபை தேர்தலில் ஜேடியூவின் கூட்டணி தேவை என கருதுகிறது பாஜக. இதனால் அக்கட்சியை திருப்திபடுத்தும் வகையில் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக முன்வந்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஜேடியூ மறுப்பு
ஆனால் ஜேடியூவின் பொதுச்செயலாளர் கேசி தியாகி, இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபோன்ற ஒரு ஆலோசனை கூட்டமே நடைபெறவில்லை என கூறியுள்ளார் தியாகி.