நாடு முழுவதும் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசத்தை தாக்க பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
அயோத்தி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இந்தியாவில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கடந்த சில தினங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் இந்த தாக்குதல் முயற்சியை முறியடிக்க மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.
ராணுவ உளவுத்துறை, புலனாய்வுத்துறை மற்றும் ரா அமைப்பும் இந்த விஷயத்தை உறுதி செய்துள்ள நிலையில், ஜெய்ஷ் இ முகமது தாக்குதல் நடத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்
மதவாத பின்னடைவு
ராமஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் மதவாத பிரச்சினைகளை தூண்டும் வகையில் தீவிரவாத தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் எச்சரிக்கை
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது முதலே இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வுத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
உத்தரபிரதேசத்திலும் தாக்குதல்
ஜெய்ஷ் இ முகமதுவின் இந்த தாக்குதல் எந்தப்பகுதிகளில் நடத்தப்படலாம் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தொடர் எச்சரிக்கை
உளவுத்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருசேர எச்சரிக்கை விடுத்துள்ளதால், சம்பந்தப்பட்ட இந்த மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.