பேராசிரியர் முதல் அரசியல்வாதி வரை.. ஏலத்திற்கு வந்த ஜெட் ஏர்வேஸ்.. வாங்க துடிக்கும் முகங்கள்!
டெல்லி: ஏலத்திற்கு வந்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க பலர் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். இதில் விமான துறைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் இழப்புகள் மற்றும் கடும் நிதி நெருக்கடிகளில் சிக்கி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் இன்னும் முழுதாக காலாவதியாகவில்லை. இதை காலாவதி ஆகாமல் காக்கும் பொறுப்பை எஸ்பிஐ வங்கி ஏற்றுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களை விற்று தற்போது கடன்கள் அடைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 17ம் தேதி இந்த நிறுவனம் மொத்தமாக முடங்கியது. உலகம் முழுவதும் 120 விமானங்களுடன் இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது ஒரு விமானத்தை கூட இயக்க முடியாமல் தரையிறக்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம்தான் இதன் சிஇஓ தனது பணியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதன் சிஇஓ வினய் துபே தனது பணியை திடீர் என்று ராஜினாமா செய்தார். இதில் அதிக பங்குகளை வைத்து இருக்கும் எத்தினாட் ஏர்வேஸ் தனது பங்குகளை 24%க்கும் அதிகமாக உயர்த்த முடியாது என்று கூறிவிட்டது.இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் பங்குகள் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளையோடு ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிகிறது. பலர் இதுவரை இந்த பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் சிலர் கொஞ்சம் கூட இந்த துறையுடன் தொடர்புடையவர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முதல்முறையாக ஏலம் கேட்டது முன்னாள் பிரிட்டிஷ் விமான சர்வீஸ் ஏஜென்ட் ஜேசன் அன்ஸ்வொர்த் என்பவர் ஆவார். விமான நிலைய அலுவலக பணிகளை பார்த்துக் கொண்டு இருந்த இவர் தற்போது இந்த நிறுவனத்தை ஏலம் எடுக்க முடிவு செய்துள்ளார்.
அதேபோல் மும்பையை சேர்ந்த டார்வின் குழு என்ற நிறுவனம் இதை ஏலம் எடுக்க முன்னுக்கு வந்துள்ளது. இந்த நிறுவனம் கொஞ்சமும் விமான துறைக்கு தொடர்பில்லாத நிறுவனம் ஆகும். ஏற்கனவே கப்பல் போக்குவரத்து, மருந்து துறை, ஐடி துறைகளில் இந்த நிறுவனம் கால் பதித்து இருக்கிறது. ஜெட் ஏர்வேஸில் 14 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதோடு இந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் ஹரிநாத் சிங் பெரிய உத்தர பிரதேச அரசியல்வாதி ஒருவரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெங்களூரை சேர்ந்த சஞ்சய் விசுவநாதன் என்பவரால் தொடங்கப்பட்ட அடி பார்ட்னர்ஸ் என்ற லண்டன் நிறுவனமும் இதை வாங்க முடிவெடுத்துள்ளது.
இது இல்லாமல் புளோரிடாவில் கல்லூரி பேராசிரியாராக இருக்கும் சங்கரன் ரகுநாதன் என்பவரும் இந்த ஏலத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். ஜெட் ஏர்வேஸில் இருக்கும் மைனாரிட்டி பங்குதாரர்களை இணைத்து குழு போல உருவாக்கி பணம் செலுத்துவேன்.
21 ஆயிரம் கோடி ரூபாய் வரை தன்னால் செலுத்த முடியும் என்று இவர் கூறியுள்ளார். இவரை போலவே பலர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலம் எடுக்க விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்களின் நிறுவனத்திற்கு, குறைந்தபட்ச மூலதனம் ரூ.1000 கோடியாவது இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 3 வருட அனுபவமாவது இந்த விமான துறையில் இருக்க வேண்டும் என எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.