ஜார்கண்டில் நவ. 30 முதல், 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல்.. டிச. 23ல் வாக்கு எண்ணிக்கை!
டெல்லி: ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல், கடந்த 2014ம் ஆண்டு, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவு, அந்த ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி வெளியானது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஜார்க்கண்ட் உருவாக்கப்பட்ட பின்னர், மாநில சட்டசபையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது இது முதல் தடவையாகும், பாஜக மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்றது.
ரகுபார் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 10 வது முதல்வராக 2014 டிசம்பர் 28 அன்று பதவியேற்றார். பிப்ரவரி 11ம் தேதி, 2015 அன்று 6 ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதால், இன்று தேர்தல் ஆணையம், இம்மாநிலத்திற்கான தேர்தல் அட்டவணையை அறிவித்தது.
டெல்லியில் நிருபர்களிடம் இன்று மாலை பேட்டியளித்த, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது: ஜார்கண்டில்,
மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 30-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நவ 30ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப் பதிவு- டிசம்பர் 7ம் தேதியும், 3-ம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 12ம் தேதியும் 4-ம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 16ம் தேதியும் நடைபெறும். டிசம்பர் 20ம் தேதி 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. தேர்தல் அறிவிக்கை நவம்பர் 6ம் தேதி வெளியிடப்படும். நவம்பர் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை நவம்பர் 14ம் தேதி நடைபெறும். டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இங்குள்ள, 13 மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக இந்த மாவட்டங்களில் தேர்தலின்போது சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின்போது எதிர்பார்த்ததை விட குறைந்த இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. தற்போது ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. எனவே முந்தைய இரு மாநிலங்களைப் போலவே இங்கும் பாஜகவுக்கு கடும் சவால் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதால் இந்த தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜார்கண்ட் தேர்தலுக்கு பிறகு டெல்லி சட்ட சபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. எனவே ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் டெல்லி சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதாலும் இந்த தேர்தல், தேசிய அளவில், மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது.