ஜார்கண்ட்டில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு.. இனி நாடு முழுக்க இப்படித்தான்
டெல்லி: நாட்டிலேயே முதன்முறையாக சூப்பர் சீனியர் முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்குகள் செலுத்தக் கூடிய வசதியை ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா இன்று டெல்லியில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், தெரிவித்தார்.
அப்போது அவர் கூடுதலாக ஒரு முக்கியமான தகவலையும் தெரிவித்தார்.
அதாவது, ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் மூலமாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றார் அவர்.
அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணியாற்றி வருவோருக்கும், இதுபோன்ற வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அந்த கோரிக்கையை ஜார்கண்ட் மாநில தேர்தலின்போது அமல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. என்றாலும் கூட, அடுத்ததாக நடைபெற உள்ள டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலின்போது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறையில் உள்ளவர்களும் தபால் மூலமாக வாக்கு செலுத்தும் நடைமுறையை கொண்டு வருவோம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை விடவும் இந்த தேர்தலின் போது ஜார்கண்டில் 20 சதவீதம் கூடுதல் வாய்ப்பு பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வாக்கு சதவீதத்தை உயர்த்துவதற்கு தேவைப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பல தரப்பின் உதவியையும் கோரி இதுபோன்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டாலும் கூட, தொடர்ச்சியாக வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறைவாகவே இருக்கிறது.
அதிலும் சமீபத்தில் நிறைவடைந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலின்போது மும்பை போன்ற பெருநகரங்களில் மிகக்குறைந்த வாக்கு சதவீதம்தான் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில்தான் அடுத்தகட்ட முயற்சியாக தபால் வாக்குகளை அறிமுகம் செய்து அதன் மூலமாக வாக்குப்பதிவு சதவீதத்தையும் உயர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜார்கண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நடைமுறை, இனிவரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுக்க அமல்படுத்தப்படும்.