வாக்கிங் சென்ற ஜார்கண்ட் நீதிபதி.. கொலை செய்யப்பட்ட விவகாரம்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் வாகிங் சென்ற நீதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்யத் தவறியதற்காக பதர்தி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் உமேஷ் மாஞ்சி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் கடந்த புதன்கிழமை காலை வாக்கிங் சென்ற போது வாகனம் மோதி உயிரிழந்தார். முதலில் இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என்றே கருதப்பட்டது.
இருப்பினும், அதன் பிறகு வெளியான சிசிடிவி காட்சியில் டெம்போ ஒன்று வேண்டுமென்றே நீதிபதி மீது மோதியது தெளிவாகப் பதிவாகியிருந்தது. தன்பாத்தில் நடந்த மாஃபியா கொலைகள் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்தார் நீதிபதி உத்தம் ஆனந்த்.
நீதிபதியில் கொலைக்கும் அவர் விசாரித்து வந்த வழக்குகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பலரும் சந்தேகம் எழுப்பினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஜார்கண்ட் மாநில அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாகச் சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்யத் தவறியதற்காக பதர்தி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் உமேஷ் மாஞ்சி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தன்பாத் எஸ்எஸ்பி சஞ்சீவ் குமார் உறுதி செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விபத்து நடந்த போது குடிபோதையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் ஜார்கண்ட் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அதேபோல இது கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றமும் "தானாக முன்வந்து" (suo motu) விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.