கட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அந்த நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது காஷ்மீர் நிர்வாகத்தின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார். அப்போது அவரிடம் நீதிபதிகள் ரமணா மற்றும் அவரது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த சுபாஷ்ரெட்டி, பிஆர் காவய் ஆகியோர், மனுதாரர்கள் எழுப்புகிற அத்தனை கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்தாக வேண்டும்.
கவனம் செலுத்துங்கள்
நீங்கள் அளித்திருக்கும் பதிலை முன்வைத்து எங்களால் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. இந்த வழக்கில் நீங்கள் போதுமான கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்கள் என சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து துஷார் மேத்தா தமது வாதத்தின் போது கூறியதாவது:
செல்போன் சேவை தடை இல்லை
ஆகஸ்ட் 5-ந் தேதி 370-வது பிரிவு நீக்கப்பட்ட நாளில் செல்போன் சேவைகளுக்கு 7 மாவட்டங்களில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதேபோல் அன்றைய தினம் 917 பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அவை மூடப்படவில்லை.
களநிலவர அடிப்படையில் முடிவு
இவை எல்லாம் எதையும் இயந்திர கதியில் அதிகாரிகள் செய்யவில்லை என்பதை காட்டுகிறது. மேலும் களநிலவரத்தை அடிப்படையாக வைத்துதான் அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஜம்மு காஷ்மீரில் அனைவருக்குமான கல்வி உரிமை சட்டம் பொருந்தாததாக இருந்தது. அப்போது யாரும் எங்களுடைய குழந்தைக்கு கல்வி கிடைக்கவில்லை என நீதிமன்றத்துக்கு வரவில்லை.
இணைய வசதி இல்லை என்கின்றனர்
அவர்கள்தான் இப்போது இணைய வசதி இல்லை; கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.
கருத்து சுதந்திரம் தொடர்பான மனுக்கள்
இதனையடுத்து நீதிபதிகள், நாங்கள் தற்போது எந்த ஒரு அரசியல் கைதிகளின் தடுப்பு காவல் குறித்து விசாரிக்கவில்லை. அனுராதா பாஷின் மற்றும் குலாம்நபி ஆசாத் தாக்கல் செய்த கருத்து சுதந்திரம் தொடர்பான மனுக்கள் குறித்துதான் விசாரிக்கிறோம் என்றனர்.