நாடாளுமன்ற தாக்குதலில் தாவிந்தர் சிங்குக்கு தொடர்பா? போலீஸ் தீவிர விசாரணை
Recommended Video
டெல்லி: 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி தாவிந்தர்சிங்குக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக்சிங் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்ட பயங்கரவாதி நவீது பாபுவை அழைத்துச் சென்ற போது ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் சிக்கினார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிக்கிய போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்தான் நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர் என தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தமது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். ஆனால் அப்போது தாவிந்தர் சிங் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
தற்போது தாவிந்தர் சிங் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை பறிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதலில் தாவிந்தர் சிங்கின் தொடர்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட கறுப்பு ஆடு யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.