வாடகை வீட்டில் பிரச்சனைக்காக காஷ்மீரி என்றாலே பயங்கரவாதி என தாக்குவதா? டெல்லி அவலம்!
டெல்லி: டெல்லியில் வாடகை வீட்டில் ஒரு பிரச்சனைக்காக காஷ்மீர் பெண் ஒருவர் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் East of Kailash சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் காஷ்மீர் பெண் நூர் உள்ளிட்டோர் தங்கி இருந்தனர். இந்த வீட்டின் உரிமையாளருக்கும் நூர் உள்ளிட்டோருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வாடகை கட்டவில்லை; மின் கட்டணம் செலுத்தவில்லை என்பது வீட்டு உரிமையாளரான பெண்ணின் புகார். ஆனால் வாடகை முறையாக செலுத்தி இருக்கிறோம் என்கின்றனர் வாடகைக்கு குடியிருந்த காஷ்மீரிகள்.
இந்த விவகாரத்தில் வீட்டுக்குள் நுழைந்து காஷ்மீர் பெண் நூர் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி இருக்கிறார் வீட்டு உரிமையாளர். அப்போது போலீசாரும் அங்கே இருந்திருக்கின்றனர். அந்த போலீசார் முன்னிலையிலேயே காஷ்மீர்காரங்க.. பயங்கரவாதிக.. என கூச்சலிட்டு தாக்கி இருக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நூர், புல்வாமாவில் ராணுவத்தின் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின்னர் ஒவ்வொரு காஷ்மீரியும் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர். ஒவ்வொருநாளும் இந்த மண்ணில் இப்படித்தான் காஷ்மீரிகள் இதுபோன்ற துயரை சுமந்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் தாக்கப்பட்ட படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.